''மஞ்சும்மல் பாய்ஸ்'' கண்மணி அன்போடு காதலன் பஞ்சாயத்து ஓவர்.. இழப்பீடு பெற்றார் இளையராஜா!
சென்னை: மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் இடம் பெற்ற 'கண்மணி அன்போடு' பாடலை அனுமதி இல்லாமல் படக்குழு பயன்படுத்திவிட்டதாக இளையராஜா மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளருக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதற்கு இழப்பீடு தர தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொண்டதால், இந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி சக்கைப்போடு போட்ட திரைப்படம் தான் மஞ்சும்மல் பாய்ஸ். கேரள மாநிலம் கொச்சியை அடுத்த மஞ்சும்மல் என்கிற கிராமத்தில் இருந்து 11 பேர் கொண்ட நண்பர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்து குணா குகையை பார்க்கின்றனர். அந்த குகையின் அழகைப்பார்த்து வியந்து போன நண்பர்கள் புகைப்படம் எடுப்பதற்காக தடையை மீறி செல்கின்றனர். அப்போது, ஒரு பள்ளத்தில் நண்பன் சுபாஷ் விழுந்துவிட அங்கிருந்த அனைவரும் பதறிப்போய் என்ன செய்வது என்று தெரியாமல் கதறி அழுகின்றனர். அதன் பின் என்ன ஆனது என்பது தான் படத்தின் கதை.

மஞ்சும்மல் பாய்ஸ்: 2006ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்தில், கண்மணி அன்போடு காதலன் பாடல், டைட்டில் கார்டோடு படம் தொடங்குகிறது. அதே போல, கிளைமாக்ஸ் காட்சியில் அனைவரும் மெய்சிலிர்க்கும் வகையில் மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல என்று பாட்டை கேட்டு ஒட்டுமொத்த தியேட்டரும் விசில் அடித்து ரசித்தனர். இத்தனை ஆண்டுகளாக காதலன் காதலிக்காக பாடிய பாடலாக பார்க்கப்பட்டு வந்த இந்த பாடல், மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் மூலம் நண்பர்களுக்கான பாடலாக மாறி, சோஷியல் மீடியாவில் ஒரு கலக்கு கலக்கியது.
நோட்டீஸ்: இதையடுத்து, இசையமைப்பாளர் இளையராஜா தரப்பு வழக்கறிஞர் சரவணன் நோட்டீஸ், மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் கண்மணி பாடலை அனுமதி இன்றி பயன்படுத்தியதாக கூறி தயாரிப்பு நிறுவனக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதற்கு படத்தின் தயாரிப்பாளரான ஷான் ஆண்டனி, பாடலின் உரிமையாளர்களான பிரமிட் மற்றும் ஸ்ரீதேவி சவுண்ட்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களிடம் முறைப்படி அனுமதி வாங்கி தான் அந்த பாடலை பயன்படுத்தினோம் என விளக்கம் கொடுத்திருந்தார்.
பஞ்சாயத்து முடிந்தது: இதையடுத்து, இளையராஜா தரப்பு, மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு 2 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு சட்டப்படி நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இளையராஜா இழப்பீடாக கேட்ட 2 கோடி ரூபாயில், 60 லட்சம் ரூபாயை கொடுக்க படத்தின் தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொண்டதால், குணா பாடல் பஞ்சாயத்து நீதிமன்றத்திற்கு செல்லாமல் முடித்துவைக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











