நடிகர் விமல் அளித்த பண மோசடி புகார்... தயாரிப்பாளர் கைது !
சென்னை : நடிகர் விமல் அளித்த பண மோசடி புகாரின் அடிப்படையில் தயாரிப்பாளரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கில்லி, குருவி, கிரீடம், காஞ்சிவரம் போன்ற திரைப்படங்களில் துணை நடிகராக நடித்தவர் விமல். இவர், பாண்டியராஜ் இயக்கி பசங்க திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். இத்திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, சற்குணம் இயக்கத்தில் களவாணி படத்தில் அறிவழகன் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் விமலுக்கு பெயர் சொல்லும் திரைப்படமாக அமைந்தது.
களவாணி திரைப்படத்தின வெற்றியைத் தொடர்ந்து தூங்கா நகரம், வாகை சூடவா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை, கலகலப்பு, தேசிங்குராஜா உள்ளிட்ட பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தார்.
நடிகர் விமல் நடிப்பில் 2018-ம் ஆண்டு வெளியான மன்னர் வகையறா திரைப்படத்தின் தயாரிப்பாளராக அறிமுகமானார். விமலின் சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளராக சிங்காரவேலன் இருந்து வந்தார். மன்னர் வகையறா படத்தை தயாரிப்பதற்காக பைனான்சியர் கோபியிடம் இருந்து சிங்காரவேலன் மூலமாக ஒப்பந்தத்தின் அடிப்படையில் 5 கோடி ரூபாய் பணத்தை விமல் வாங்கி இருந்தார்.
மன்னர் வகையறா திரைப்படம் ரிலீஸ் ஆனவுடன், பைனான்சியர் கோபியின் கடனை அடைப்பதாகவும், மீதமிருந்த பணத்தில் நிறுவனத்தில் பணியாயாற்றிய ஊழியர்களுக்கு பிரித்து கொடுத்து விடுவதாக கூறி நடிகர் விமலிடம் பல பத்திரங்களில் சிங்காரவேலன் கையெழுத்து பெற்றுள்ளார். ஆனால், சிங்காரவேலன் பைனான்சியர் கோபிக்கு கடனை திருப்பி தராமல் மோசடி செய்துள்ளார்.
இதனால் பைனான்சியர் கோபி விமலிடம் கடனை கேட்டுள்ளார். இதையடுத்து, சிங்காரவேலன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகர் விமல் கடந்தாண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, இன்று சினிமா தயாரிப்பாளர் சிங்காரவேலன் மீது மோசடி உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விருகம்பாக்கம் போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











