Manobala Death - மூக்குக் கண்ணாடியுடன் மனோபாலாவின் இறுதி பயணம் - கலங்கிய ரசிகர்கள்
சென்னை: Manobala Death (மனோபாலா மரணம்) நடிகர் மனோபாலாவின் உடல் சாலிகிராமத்திலிருந்து வளசரவாக்கம் பிருந்தாவன் மின் மயானத்துக்கு வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
பாரதிராஜாவின் முக்கியமான உதவி இயக்குநர்களில் ஒருவர் மனோபாலா. புதிய வார்ப்புகள் படத்தில் தொடங்கி டிக் டிக் டிக், கல்லுக்குள் ஈரம் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய அவர் 1982ஆம் ஆண்டு ஆகாய கங்கை படத்தின் மூலம் இயக்குநராக மாறினார். அதனைத் தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட தமிழ் படங்களையும், கன்னடத்தில், ஹிந்தியில் தலா ஒரு படத்தையும் அவர் இயக்கி வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தார்.

நடிப்பில் கவனம்: 2002ஆம் ஆண்டு நைனா படத்தை இயக்கிய அவர் சில சீரியல்களையும் இயக்கியிருக்கிறார். அதனையடுத்து இயக்கத்தை மூட்டை கட்டிவிட்டு நடிப்பு பக்கம் சென்றா மனோபாலா. நடிப்பு துறையிலும் தனது முத்திரயை வெகு சீக்கிரமாகவே பதித்துவிட்டார் அவர். இதனால் அவருக்கு பல படங்களில் வாய்ப்பு கிடைத்தது. வடிவேலு, விவேக், சந்தானம் உள்ளிட்டோருடன் அவர் செய்த காமெடி காட்சிகள் பட்டையை கிளப்பியவை.
ட்ரேட் மார்க் மனோபாலா: மனோபாலா என்றதுமே அவர் போட்டிருந்த கண்ணாடியும், அவரது ஹேர் ஸ்டைலும் பலருக்கு ஞாபகம் வரும். அந்த ஹேர் ஸ்டைலை எப்போதும் வெட்டக்கூடாது என்பதில் தீவிரமாக இருந்தவர். ஆனால் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் மனோபாலா நடித்திருக்கிறார். அதனையொட்டி ஷங்கர் கேட்டுக்கொண்டதற்காக நீண்ட யோசனைக்கு பிறகுதான் அந்த நீளமான முடியை வெட்டிக்கொண்டார் மனோபாலா. இந்தப் படம் தவிர்த்து லியோவிலும் நடித்திருக்கிறார் அவர்.
உடல்நலக்குறைவு: இப்படி பல படங்களில் நடித்திருந்த மற்றும் நடிக்க கமிட்டாகியிருந்த மனோபாலாவுக்கு கடந்த கல்லீரல் பிரச்னை உருவானது. அதோடு அவ்வப்போது நெஞ்சு வலியும் இருந்திருக்கிறது. இதனையொட்டி சென்னை அப்போலோவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட சூழலில், சில காரணங்களால் அவர் வீட்டிலிருந்தே சிகிச்சை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தார். மனோபாலா எப்படியும் உடல்நலம் தேறிவிடுவார் என அவரது குடும்பத்தினர் நம்பிக்கையில் இருந்தனர்.

உயிரிழந்த மனோபாலா: ஆனால் அவர்களின் நம்பிக்கை பொய்த்துப்போகும் விதமாக சிகிச்சை பலனின்றி எல்.வி.பிரசாத் ரோட்டில் இருக்கும் அவர் வீட்டில் மனோபாலாவின் உயிர் நேற்று பிற்பகல் பிரிந்தது. அவரது இந்த மரணம் மிகப்பெரிய சோகத்தை கோலிவுட்டுக்கு கொடுத்திருக்கிறது. சாலிகிராமத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு திரையுலகினர், பொதுமக்கள் என பலரும் நேரில் வந்து தங்களது அஞ்சலியை செலுத்தி இரங்கலை தெரிவித்தனர்.
மூக்குக்கண்ணாடியுடன் இறுதி பயணம்: குடும்பத்தினர் செய்த இறுதி சடங்கு முடித்ததை அடுத்து அவரது உடல் சாலிகிராமத்திலிருந்து வளசரவாக்கம் பிருந்தாவன் மின் மயானத்துக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது. மனோபாலாவின் இறுதி பயணத்தின்போது அவரது அக்மார்க் அடையாளமான மூக்கு கண்ணாடி அவரது முகத்தில் மாட்டப்படிருந்தது. அதனைப் பார்த்த ரசிகர்கள் இனி இந்த மூக்குக்கண்ணாடியுடன் முகம் முழுவதும் சிரிப்போடு வரும் மனோபாலாவை பார்க்கவே முடியாதே என கலங்கியபடி சென்றனர். அவரது உடல் வளசரவாக்கத்தில் தகனம் செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications











