Manobala - மனோபாலா இறப்பில் மனைவி செய்த நெகிழ்ச்சி சம்பவம் - இறந்தாலும் வாழத்தான் வெச்சிருக்காரு
சென்னை: Manobala (மனோபாலா) மனோபாலா இறந்த பிறகு அவரது மனைவி செய்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
மனோபாலா ஆகாய கங்கை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். அதன் பிறகு தமிழில் 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி வெற்றிகரமான இயக்குநர் என்ற பெயரை எடுத்தவர். பாரதிராஜாவின் பட்டறையிலிருந்து வந்த அவர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராகவும் வலம் வந்தவர். அவர் கடைசியாக 2002ஆம் ஆண்டு நைனா என்ற படத்தை இயக்கியிருந்தார்.

நடிகராக ஜொலித்த மனோபாலா: இயக்குநராக வெற்றி கண்ட அவர் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடிகராகவும் ஜொலித்திருக்கிரார். நகைச்சுவை கதாபாத்திரம், குணசித்திர கதாபாத்திரங்களில் கலக்கியவர். கடைசியாக அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் லியோ, ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தியன் 2 மற்றும் வேறு சில படங்களில் நடித்திருக்கிறார்.
தயாரிப்பாளர் மனோபாலா: இயக்குநர், நடிகர் என்பதைத் தாண்டி தயாரிப்பாளராகவும் தரமாக விளங்கினார். இன்றைய இளம் இயக்குநர்களில் முக்கியமானவரான ஹெச்.வினோத் இயக்கிய சதுரங்க வேட்டை படத்தை தயாரித்து கவனம் ஈர்த்தார் மனோபாலா. அதனையடுத்து சதுரங்க வேட்டை 2, பாம்புசட்டை படங்களை தயாரித்தார். இவற்றில் சதுரங்க வேட்டை 2 படம் சில பிரச்னைகளால் இன்னும் வெளியாகாமல் இருந்தது. அப்படத்தில் அரவிந்த் சாமி, த்ரிஷா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
உயிரிழந்த மனோபாலா: இந்தச் சூழலில் அவருக்கு கல்லீரல் பிரச்னை உருவானது. எனவே அதற்கான சிகிச்சையை முதலில் மருத்துவமனையில் எடுத்த அவர் பிறகு தனது வீட்டில் இருந்தபடியே எடுத்துக்கொண்டார். எப்படியும் உடல் நலம் தேறிவிடுவார் என்று அவரது ரசிகர்களும், குடும்பத்தினரும், நண்பர்களும் நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் நம்பிக்கையை பொய்யாக்கும் விதமாக சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

திரண்ட திரையுலகம்: மனோபாலாவின் மரணம் ஒட்டுமொத்த கோலிவுட்டையும் பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியது. இயக்குநர்கள்,நடிகர்கள் என பலரும் நேரில் வந்து மனோபாலாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதில் சில முன்னணி நடிகர்களும்,நடிகைகளும் வராதது விவாதத்தை கிளப்பியிருக்கிறது. மனோபாலாவின் உடலானது வளசரவாக்கத்தில் இருக்கும் பிருந்தாவன் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் ரசிகர்களும் பங்கேற்றிருந்தனர்.
மனோபாலா மனைவியின் நெகிழ்ச்சி செயல்: இந்நிலையில் மனோபாலா மனைவி செய்திருக்கும் செயல் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. அதாவது, மனோபாலாவின் சமூதாய வழக்கப்படி ஒருவர் இறந்து விட்டால் அவரது உடைமைகள் வீசப்பட்டு எரிக்கப்படுவது வழக்கம்.ஆனால் அவரின் மனைவியோ மனோபாலாவின் உடைமைகளை எரிக்காமல் அதை அப்படியே அனாதைகள் இல்லம் ஒன்றுக்கு வழங்கியிருக்கிறாராம்.
மனோபாலாவின் நினைவாக கை கடிகாரத்தை மட்டும் எடுத்துக்கொண்டாராம். அவரது இந்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. அதுமட்டுமின்றி மனோபாலா இறந்தாலும் பலரையும் வாழ வைத்திருக்கிறார் என ரசிகர்க்ள் கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











