Manobala Letter - இது மரண அவஸ்தை.. கண்டிப்பா மீண்டும் வரணும் - மனோபாலா எழுதிய கலங்க வைக்கும் கடிதம்
சென்னை: Manobala Letter (மனோபாலா கடிதம்) நடிகரும் இயக்குநருமான மனோபாலா தனது நண்பர் சித்ரா லட்சுமணனுக்கு எழுதிய கடிதம் பலரையும் கலங்க வைத்துள்ளது.
பத்திரிகையாளர் பாலசந்தர் திரைப்படத்துறையில் நுழையும்போது மனோபாலா என பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிராஜாவிடம் புதிய வார்ப்புகள், டிக் டிக் டிக், கல்லுக்குள் ஈரம் உள்ளிட்ட பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி அவரது முதன்மை மாணவர்களில் ஒருவராக மாறினார். அதன் பிறகு ஆகாய கங்கை படத்தின் மூலம் இயக்குநராக மாறி பல படங்களை இயக்கி வெற்றிகரமான இயக்குநராகவும் வலம் வந்தார்.
நடிகராக மனோபாலா: 2002ஆம் ஆண்டு நைனா படத்தை இயக்கிவிட்டு சில சீரியல்களை இயக்கிய மனோபாலா நடிப்பில் தீவிரமாக கவனம் செலுத்தினார். தனது உடல் மொழி, டயலாக் டெலிவிரி உள்ளிட்டவைகளால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த அவர் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜின் லியோ, ஷங்கரின் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

உயிரிழந்த மனோபாலா: இந்தச் சூழலில் கல்லீரல் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் முதலில் சிகிச்சை எடுத்த அவர் அதற்கு பிறகு வீட்டில் இருந்தபடி சிகிச்சை எடுத்துக்கொண்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த மூன்றாம் தேதி உயிரிழந்தார். அவரது உயிழப்பு திரையுலகத்தினரையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் தள்ளியிருக்கிறது. நாளை மாலை அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.
மனோபாலாவின் கடிதம்: இந்நிலையில் மனோபாலா தனது நண்பரான சித்ரா லட்சுமணனுக்கு பல வருடங்களுக்கு முன்னர் எழுதிய கடிதம் அனைவரையும் கலங்க வைத்துள்ளது. அந்தக் கடித்த்தில், "டியர் சித்ரா, என்னமோ சட்டென்று ஒரு எண்ணம் ஏதோ எழுத வேண்டும் என்று நினைவுக்கு வந்தது நீங்கள்தான். தப்பா இது? ஒரு மன அரிப்பு, எங்கே எப்போது என்று அலைந்து கொண்டிருக்கிற மனதை சாந்தப்படுத்திக் கொள்ள ஒரு முயற்சி.
என்ன சித்ரா இது?: நாம் அதிகம் பேசிக்கொண்டதில்லை.. பார்டர் தாண்டி நீங்களும் வந்ததில்லை, நானும் வந்ததில்லை. அது ஏன் என தெரியாது. இப்போது இது ஒரு முயற்சி சித்ரா, நான் தொழிலை எவ்வளவு நேசிக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும். எதையாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்து வந்தவன் நான். ஆனால் இது என்ன சித்ரா எல்லாம் இடறல் மயம், ஏன் இப்படி ஆனது? எல்லா இடங்களிலும் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கவிழ்த்து விட்டு வேடிக்கை பார்க்கும் மனிதர்கள்.
ஒன்னுமே புரியல உலகத்துல: என் தவறாக இருக்கலாம்? எங்கே தவறிப் போய் இருக்கிறேன் சத்தியமாக தெரியவில்லை, ஆனால் வந்து விடுவோம் என்று தெரிகிறது. எப்போது என்பதுதான் கேள்வி? சித்ரா உங்களுக்கு இது புரிகிறதா? இந்த கடிதம் எழுதும் போது ஒரு பாடல் ஒலிக்கிறது.. ஒண்ணுமே புரியல உலகத்திலே, என்னும் பாடல் உண்மை. அப்படித்தான் இருந்து விட்டேனோ.!?
கண்டிப்பா வரணும் சித்ரா: ஆனால் நான் வரணும் சித்ரா கண்டிப்பா வரணும் என்று என்னை பார்த்து சிரிப்பவர்களை பார்த்து நான் சிரிக்கும் காலம் வரும் சித்ரா. இது ஒரு அக்கினி நெருப்பு அணைக்கவும் விடாமல் எரிந்து போகவும் விடாமல் மரண அவஸ்தை. எல்லாத்தையும் கண்ணில் காட்டி விட்டு இது உனக்கு கிடையாது என்ற சொல்வதுபோல இருக்கிறது" என குறிப்பிட்டிருக்கிறார். சித்ரா லட்சமணனும் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்தவர் என்பது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











