மனோரமாவுக்கு தலையில் ஆபரேஷன்-கோமாவில் இல்லை என மகன் தகவல்

மனோரமாவுக்கு ஏற்கனே முழங்கால் வலி நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதற்காக அவர் கேரளா போய் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டார். அப்படியும் வலி தீரவில்லை. இதையடுத்து சென்னை திரும்பிய அவர் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். அதன் பின்னர் அவர் வீட்டிலேயே இருந்து ஓய்வெடுத்து வந்தார். படங்களில் நடிப்பதையும் கிட்டத்தட்ட நிறுத்தி விட்டார்.
இந்த நிலையில் 27ம் தேதி அவர் வீட்டு குளியலறையில் வழுக்கி விழுந்து விட்டார். அதில் அவருக்குத் தலையில் அடிபட்டது. உடனடியாக அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர் கோமாவில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியதால் மனோரமாவின் ரசிகர்கள் சோகமடைந்தனர். ஆனால் அதை மனோரமாவின் மகன் பூபதி மறுத்துள்ளார். அவர் கூறுகையில், மனோரமா கோமாவில் இல்லை. அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. ஸ்கேன் செய்து பார்த்ததில் ரத்தக்கசிவு இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதை அகற்ற செவ்வாய்க்கிழமை அறுவைச் சிகிச்சை செய்யப்படவுள்ளது என்றார் பூபதி.


Click it and Unblock the Notifications











