விஜய் வீட்டுக்கு வந்த மன்சூர் அலிகான்.. தளபதிக்கு ஆதரவாக களத்தில்.. என்ன சொல்றாரு?
சென்னை: விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும்; பெரும்பான்மை கிடைக்காததால் இத்தனை நாட்கள் ரொம்பவே திணறிவிட்டார். அவருக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் கட்சிகள் ஆதரவு கொடுத்திருக்கின்றன. ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்னமும் தனது நிலைப்பாட்டினை அறிவிக்கவில்லை. இந்நிலையில் பிரபல நடிகர் மன்சூர் அலிகான் விஜய் வீட்டுக்கு முன்பு வந்து நின்றுகொண்டு பேசிய விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளை வென்றிருக்கிறது. அந்த 108 எம்.எல்.ஏக்களில் ஒருவர் சபாநாயகர் என்பதால் தவெகவும் மொத்தம் 107 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருந்தது. பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கைகளை பெறுவதற்கு மற்ற கட்சிகளிடம் ஆதரவு கேட்டது. அதன் பலனாக இதுவரை காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் கட்சிகள் தங்கள் ஆதரவை கொடுத்திருக்கின்றன. இதன் காரணமாக 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தவெகவுக்கு கிடைத்தது. இன்னும் ஒரு எம்.எல்.ஏ ஆதரவு வேண்டும் என்பதால் விசிகவை ரொம்பவே நம்பியது தவெக.

திருமாவளவனின் முடிவு: முதலில் விசிக தனது நிலைப்பாட்டினை இன்று காலை அறிவிப்பதாக தெரிவித்தது. விஜய்யும் விசிக அலுவலகத்துக்கு வந்து திருமாவை சந்திப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் விசிகவோ காலையில் அறிவிக்காமல் இன்று மாலை நான்கு மணிக்கு தனது முடிவை அறிவிப்பதாக தெரிவித்தார். இன்னமும் விசிகவின் நிலைப்பாட்டினை அறிவிக்கவில்லை. தவெகவுக்கு விசிக ஆதரவு கொடுப்பாரா இல்லையா என்பதை தெரிந்துகொள்ளத்தான் ஒட்டுமொத்த இந்தியாவும் காத்திருக்கிறது.
நடந்த ட்விஸ்ட்: இதற்கிடையே அமமுக எம்.எல்.ஏ காமராஜின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக கடிதம் ஒன்றை ஆளுநரிடம் கொடுத்திருக்கிறது தவெக. ஆனால் அமமுக தலைவர் டிடிவி தினகரனோ, காமராஜ் ஆதரவு தெரிவிக்கவில்லை. ஒன்று அவரது கையெழுத்தை போலியாக போட்டிருக்க வேண்டும் அல்லது குதிரை பேரம் நடந்திருக்க வேண்டும் என்று ஓபனாக சொன்னார். மேலும் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே விஜய் இப்படி முறையற்ற செயல்களில் ஈடுபடுகிறார். இவர் எப்படி தமிழ்நாட்டுக்கு நல்லாட்சி வழங்குவார் என்று போட்டு தாக்கிவிட்டார்.
மன்சூர் அலிகான் களத்தில்: கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு அரசியல் களம் பெரிய பரபரப்புடன் இயங்கிவருகிறது. இந்நிலையில் பிரபல நடிகரான மன்சூர் அலிகான் இன்று திடீரென விஜய் வீட்டுக்கு முன்பு வந்து நின்றார். அப்போது அவர், விஜய் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். இதெல்லாம் பார்க்கும்போது எனக்கு ரத்தம் கொதிக்கிறது. எந்த வேலையையும் செய்ய முடியவில்லை. மகாராஷ்டிரா, கர்நாடகாவில் என்ன நடந்தது?.. ஆளுநரின் செயல் ஜனநாயகத்துக்கு எதிரானது" என்று கொந்தளித்தார்.
சுயேட்சை வேட்பாளர் மன்சூர்: முன்னதாக மன்சூர் அலிகான் சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் இயங்குவார். முதலில் நாம் தமிழர் கட்சியில் சேர்ந்த அவர் அடுத்ததாக புதிய கட்சியை தொடங்கினார். இது ஒருபக்கம் இருக்க நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் லால்குடி தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக மன்சூர் போட்டியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் விஜயுடன் அவர் நீண்ட வருடங்களாக நடித்துவருகிறார். லியோ படத்திலும் முக்கியமான ரோலை ஏற்றிருந்தார்.


Click it and Unblock the Notifications
