மகன் தப்பு செய்தான்.. போலீஸில் பிடித்துக்கொடுத்தேன்.. மன்சூர் அலிகான் ஓபன் டாக்
சென்னை: வேலை கிடைச்சிடுச்சு என்ற படத்தில் நடிகராக அறிமுகமானாலும் விஜயகாந்த்தின் 100ஆவது படமான கேப்டன் பிரபாகரன் படம்தான் மன்சூர் அலிகானுக்கு நல்லதொரு அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. அந்தப் படம் மெகா ஹிட்டானதோடு மட்டுமின்றி மன்சூருக்கு பெரும் பெயரை பெற்றுக்கொடுத்தது. அதனையடுத்து பல படங்களில் வில்லன் ரோலினை ஏற்றிருந்த அவர் ஒருகட்டத்தில் ஹீரோவாகவும் நடிக்க ஆரம்பித்தார். இந்தச் சூழலில் அவர் தனது மகன் குறித்து பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் 90களில் ஃபேமஸ் வில்லனாக வலம் வந்தவர் மன்சூர் அலிகான். விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் படத்தில் வில்லனாக நடித்து வெளிச்சத்தை பெற்ற அவர்; அந்தப் படத்துக்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடித்தார். அவரது வித்தியாசமான உடல்மொழியும், நடிப்பும் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது. அதேபோல் சண்டை காட்சியிலும் அபாரமாக நடிக்கக்கூடியவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருகட்டத்தில் வாய்ப்புகள் அவருக்கு குறைய ஆரம்பித்தன.

நக்கல் பிடித்த ஆளு: திரைப்படங்களில் எப்படி நக்கலான உடல்மொழியுடன் தோன்றுவாரோ அதேபோல்தான் பொதுவெளிகளிலும் இருப்பார். அவர் பேட்டி கொடுக்கிறார் என்றால் அதில் ஏதோவொரு கன்டெண்ட் கண்டிப்பாக இருக்கும். முக்கியமாக அவரை பேட்டி எடுக்கும் தொகுப்பாளரை பாடாய் படுத்தி எடுத்துவிடுவார். அவர் கொடுக்கும் பேட்டிகளுக்கும் தான் மிகப்பெரிய ரசிகன் என்று தற்போதைய சென்சேஷனல் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பலமுறை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சை பேச்சு: அதேபோல் சர்ச்சையாக பேசுவதிலும் மன்சூர் அலிகானை அடித்துக்கொள்ள முடியாது. கடந்த வருடம் அவர் கொடுத்த ஒரு பேட்டியில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அதற்கு பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தார்கள். அதேபோல் சமீபத்தில்கூட குஷ்பூ மற்றும் விஷால் குறித்தும் அவ்வாறே பேசினார். மன்சூர் அலிகான் இப்படி பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பல தரப்பிலிருந்தும் அவருக்கு வலியுறுத்தல்கள் வர ஆரம்பித்திருக்கின்றன.
மகன் கைது: இது ஒருபக்கம் இருக்க அண்மையில் அவரது மகன் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார். மெத் எனப்படும் போதைப் பொருளை அவரும் அவரது நண்பர்களும் விற்றதாக ஆதாரங்கள் உறுதியானதை அடுத்து அவரை அதிரடியாக போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தார்கள். இன்னமும் அவர் சிறையில்தான் இருக்கிறார். இந்தச் சூழலில் தனது மகன் கைது குறித்து செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் மன்சூர் அலிகான் பேசியிருப்பது கவனத்தை ஈர்த்திருக்கிறது.
என்ன பேசினார்?: அவர் பேசுகையில், "என்னுடைய மகனை நான்தான் காவல் துறையினரிடம் பிடித்துக்கொடுத்தேன். அவன் சிகரெட் பிடிப்பானா என்று கூட எனக்கு தெரியாது என்பதுதான் உண்மை. அவனை விசாரணைக்காக போலீஸ் அழைத்து சென்றது. அப்போது எனது மகனிடம் தவறு செய்தாயா என்று கேட்டேன். அதற்கு அவன் ஆமாம் என்று கூறினான். உடனே பளார் என்று ஒரு அறை விட்டேன். என்னுடைய மகன் மட்டுமில்லை யார் செய்தாலும் தவறு தவறுதான். இப்போது பள்ளி குழந்தைகள்வரை கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகிவிடுகிறார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











