ஸ்ரீகாந்த் நல்ல நடிகர்.. சின்ன பசங்க எல்லாம் அந்த பழக்கத்தால கெட்டுப் போறாங்க.. மன்சூர் அலி கான் ஆவேசம்!
சென்னை: போதைப் பொருள் பழக்கத்தால் சின்ன பசங்க கூட கெட்டுப் போகும் சூழல் உருவாகியுள்ளது. வெளிநாடுகளை போல கடுமையான சட்டம் போட்டு அதை கட்டுப்படுத்தினால் மட்டுமே இதை தடுக்க முடியும் என நடிகர் மன்சூர் அலி கான் செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார். மேலும், நடிகர் ஸ்ரீகாந்த் கைது தொடர்பாகவும் மன்சூர் அலி கான் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
ரோஜாக்கூட்டம், ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு என தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து வந்த நடிகர் ஸ்ரீகாந்த் ஒரு கட்டத்தில் சரியாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் தோல்விகளை சந்திக்க ஆரம்பித்தார்.

ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, இலியானா நடித்த நண்பன் படத்தில் நடித்த ஸ்ரீகாந்த் மீண்டும் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனல, அதன் பின்னரும் அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை. கடைசியாக தினசரி படத்தில் தயாரிப்பாளரையே ஹீரோயினாக நடிக்க வைத்து ஏகப்பட்ட ட்ரோல்களை சந்தித்தார்.
ஸ்ரீகாந்த் ஒரு நல்ல நடிகர்: மன்சூர் அலி கான் இன்று செய்தியாளர்களை சந்தித்த நிலையில், போதைப்பொருள் தொடர்பாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் குறித்து அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதிலளித்த மன்சூர் அலி கான் ஸ்ரீகாந்த் ஒரு நடிகர், நல்ல மனிதர், ஆனால், பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், அவர் இப்படி போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையாகி விட்டார் என்றார். மேலும், போதைப் பொருட்கள் யாருக்கும் கிடைக்காத வகையில் போலீசார் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஆவேசமாக பேசினார்.
சின்ன பசங்க வரை கெட்டுப் போறாங்க: ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உள்ளிட்ட நடிகர்கள் மட்டுமின்றி பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் சிறுவர்கள் வரை இந்த போதைப் பொருள் புழக்கத்தால் ரொம்பவே கெட்டுப்போறாங்க. நம்ம நாட்டில் பழங்கள், காய்கறிகள் கூட ஊசிப் போட்டு வளர்க்கும் நிலை உருவாகி விட்டது. அடுத்த தலைமுறையினரை நினைத்தால் ரொம்பவே வருத்தமாகத்தான் உள்ளது. அவர்களுக்கு ஆரோக்கியமான எதிர்காலமே கிடையாது என்றும் தமிழ்நாட்டு காவல்துறை இரும்புக்கரம் கொண்டு இந்த போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
அஜித்குமார் மரணம்: காவல்துறையினர் மோசமாக தாக்கி விசாரணை நடத்தியதில் அஜித் குமார் எனும் இளைஞர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் மீது போலியாகவோ உண்மையாகவோ ஒருவர் புகாரளித்தால் இப்படியா விசாரணையின் பேரில் கொலை செய்வது என்றும் அந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை எல்லாம் மக்கள் முன்பு நிறுத்தி கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என ஆவேசப்பட்டு பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











