ஹலோ விஜய் 2 லட்சம் ரூபாய் கொடுங்கள்.. மன்சூர் அலிகான் வைத்த கோரிக்கையை பாருங்க
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கும் விஜய் அடுத்த வருடம் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் களமிறங்கவிருக்கிறார். சினிமாவில் ஏற்படுத்திய தாக்கம் போல் கண்டிப்பாக அரசியலிலும் தனது தடத்தை அழுத்தமாக பதிவு செய்திட வேண்டும் என்பதில் முழுமூச்சாக இருக்கிறார். தமிழ்நாட்டை ஆளும் கட்சியான திமுகவை கடுமையாக சாடிவரும் சூழலில் அவருக்கு நடிகர் மன்சூர் அலிகான் ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறார்.
கோலிவுட் சினிமாவில் டாப் கியரில் போய்க்கொண்டிருப்பவர் விஜய். ஒரு படத்துக்கு 150 கோடி ரூபாய்வரை அவர் சம்பளமாக வாங்குகிறார் என்று சொல்லப்படுகிறது. மேலும் அவர் நடிக்கும் படங்கள் விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும் வசூலில் பட்டையை கிளப்புவதாக அவரை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர்கள் சொல்கிறார்கள். சூழல் இப்படி இருக்க நடிப்புக்கு டாட்டா சொல்லிவிட்டு அரசியலில் களமிறங்கியிருக்கிறார். கடைசியாக ஹெ.வினோத் இயக்கத்தில் ஜன நாயகன் படத்தில் நடித்துவருகிறார்.
குவியும் பாராட்டு: விஜய் அரசியலுக்கு வந்ததிலிருந்து அவரை பலர் விமர்சனம் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். அதேசமயம் தனக்கு இருக்கும் உச்சக்கட்ட மார்க்கெட்டை விட்டுவிட்டு எந்த நடிகரும் அரசியலுக்கு வரமாட்டார். அந்தவகையில் விஜய் பெரிய தைரியசாலி; அவரது இந்த முடிவுக்கு பாராட்டு தெரிவிக்கலாம் என திரைத்துறையிலேயே பேச்சுக்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன. மேலும் சினிமாவிலிருந்து யார் யார் தவெகவில் இணைவார்கள் என்பது இன்னும் சில காலத்தில் தெரிந்துவிடும்.

திமுகதான் எதிரி: அவரை பொறுத்தவரை திமுகவைத்தான் தனது முதன்மை எதிரியாக தேர்ந்தெடுத்திருக்கிறார். முதலில் முதலமைச்சர் ஸ்டாலினின் பெயரை நேரடியாக சொல்லாமல் விமர்சித்துவந்த அவர்; கட்சியின் செயற்குழு கூட்டத்தில்தான் முதன்முறையாக ஸ்டாலின் பெயரை உச்சரித்து எதிர்க்க ஆரம்பித்தார். அதற்கு முன்னதாகவே திமுகவை அவர் கடுமையாக விமர்சனம் செய்ததற்கே அக்கட்சியினர் விஜய்யையும் விமர்சிக்க தொடங்கினார்கள். ஆனால் விஜய்யோ தொடர்ந்து தனது தாக்குதலை நடத்திவருகிறார்.
நேற்று வெளியிட்ட ட்வீட்: நேற்றுக்கூட, டெல்லியில் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர், நிதித்துறை அமைச்சர் உள்ளிட்டோருடன் புகைப்படம் எடுத்துக்கொள்கையில் முன் வரிசையில் நின்றார். அந்தப் புகைப்படத்தை பார்த்த விஜய்யோ, தனது எக்ஸ் பக்கத்தில், 'குடும்பச் சுயநலத்திற்காக, தமிழக மானத்தை அடகுவைத்து, ஒன்றிய பாஜக அரசிடம் தாள் பணிந்து தலைவணங்கி அடைக்கலம் புகுந்த திமுக. தலைமை. பூனைக்குட்டி வெளியே வந்ததுவிட்டது. திமுகவும் பாஜகவும் ரகசிய கூட்டணி வைத்திருக்கின்றன என்று விளாசினார்.
திமுகவின் தரமான பதிலடி: விஜய் அப்படி ட்வீட் போட்டதையடுத்து அத்தனை திமுகவினரும் விஜய்யை வறுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இவர்தான் பிஜேபியின் பி டீம் என்று தொடர்ந்து சொல்லிவரும் அவர்கள்: நரேந்திர மோடியை சில வருடங்களுக்கு முன்பு விஜய் பார்த்த புகைப்படத்தை பகிர்ந்து ட்ரோல் செய்கிறார்கள். அதுமட்டுமின்றி மோடிக்கு ரகசிய ஆதரவு கொடுப்பதால்தான் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருப்பதாகவும் விமர்சனங்கள் எழுகின்றன.
மன்சூர் அலிகான் பேட்டி: இந்நிலையில் விஜய் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசுகையில், "மக்கள் கைகளில் காசு இல்லாமல் இருப்பது பெரிய குறை. அடுத்ததாக ஆட்சிக்கு விஜய் வருகிறாரா?; வாக்கு செலுத்தும் குடும்பத்துக்கு இரண்டு லட்ச ரூபாயை ஃபிக்சட் டெபாசிட்டில் அவர் போட வேண்டும். அதை வைத்து மக்கள் வியாபாரம் செய்துகொள்ளலாம். அதற்கு வரி இல்லை என தேர்தல் அறிக்கையை தவெக தரப்பில் விஜய் ரிலீஸ் செய்ய வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications











