ஆச்சி மனோரமாவை கவனிக்கவும் ஆளில்லையே- மன்சூர் அலிகான் ஆதங்கம்
ஆச்சி என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் மனோரமாவை கவனிக்கக் கூட ஆளில்லை. அவருக்கு கோடிக்கணக்கான சொத்துகள் இருந்தும் முறையான சிகிச்சை இல்லாமல் தவிக்கிறாரே என்று நடிகர் மன்சூர் அலிகான் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
ஆயிரம் படங்களுக்கும் மேல் நடித்த அபூர்வ தமிழ் நடிகை மனோரமா. எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் தொடங்கி இன்றைய நடிகர்கள் காலம் வரை நடித்துள்ளார்.

மனோரமாவுக்கு சில மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. குளியல் அறையில் வழுக்கி விழுந்தார். முழங்காலில் அறுவைச் சிகிச்சை நடந்தது. சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினார்.
தற்போது மனோரமாவுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. ஆனால் அவரை மருத்துவமனையில் கூட சேர்க்காமல் வீட்டிலேயே போட்டு வைத்துள்ளனர் என்று சமீபத்தில் போய் பார்த்துவிட்டு வந்த மன்சூர்அலிகான் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், "என் மகள் திருமணத்துக்காக மனோரமாவுக்கு அழைப்பிதழ் வைக்க அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன்.
அங்கே அவர் இருந்த நிலைமையைப் பார்த்து கலங்கிப் போனேன். முகம், கை காலெல்லாம் வீங்கிப் போய், சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டுக் கொண்டு இருந்தார்.
அடிக்கடி ‘டயாலிசஸ்' செய்ய வேண்டும். அதை கூட செய்யவில்லை. சிறநீரக மாற்று ஆபரேஷன் செய்தால் அவர் இன்னும் நீண்ட நாள் உடல் நலத்தோடு இருப்பார். அதையும் செய்யவில்லை. மருத்துவமனையிலும் சேர்க்க வில்லை.
மனோரமா நடித்து கோடி கோடியாய் சம்பாதித்துள்ளார். சென்னையிலேயே பல கோடிக்கு சொத்துக்கள் உள்ளன. அப்படிப்பட்டவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்காமல் வைத்திருப்பது வருத்தமாக உள்ளது.
ஒட்டு மொத்த திரையுலகினருக்கும் மனோரமா மேல் பாசம் இருக்கிறது. எனவே அவரை மருத்துவமனையில் சேர்த்து சிறுநீரக மாற்று ஆபரேஷன் செய்ய முயற்சி எடுக்க வேண்டும்," என்றார்.


Click it and Unblock the Notifications











