சொன்னதைச் செய்த மன்சூர் அலிகான்.. மணமக்களை வாழ்த்த கிங் காங் வீட்டுக்கே போய்ட்டரே!
சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் கிங்காங்கின் மகள் கீர்த்தனாவிற்கும், நவீன் என்பவருக்கும் கடந்த ஜூலை 10-ஆம் தேதி சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஆறுபடை முருகன் கோவிலில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. எளிமையான முறையில் திருமணம், அதைத் தொடர்ந்து பிரமாண்டமான முறையில் வரவேற்பு என கீர்த்தனாவின் திருமணமே கலைகட்டியது. இந்நிலையில் திருமணத்திற்கு வரமுடியாத நடிகர் மன்சூர் அலிகான், மணமக்களை இல்லத்தில் சென்று வாழ்த்தியுள்ளார்.
கீர்த்தனா மற்றும் நவீனின் திருமணம் காதல் திருமணமாகும். திருமண வரவேற்பு அன்று மாலை, அசோக் பில்லரில் இருக்கும் எம்பிகே மஹாலில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கும் கிங்காங், பல முன்னணி நடிகர்களையும் அரசியல் பிரமுகர்களையும் நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்தார்.
இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திமுக அமைச்சர்கள், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நடிகர் விஷால், முத்துக்காளை, கயல் தேவராஜ், ரோபோ சங்கர், போன்ற பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அதே நேரத்தில் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கார்த்தி போன்ற முன்னணி நடிகர்கள் சிலர் திருமணத்தில் கலந்து கொள்ளாதது இணையத்தில் விமர்சனங்களை கிளப்பியது.

சிவகார்த்திகேயன் சர்ப்ரைஸ்: குறிப்பாக, கிங்காங்கின் மகள் கீர்த்தனா சிவகார்த்திகேயனின் தீவிர ரசிகை என்பதால் அவர் திருமணத்திற்கு வராதது தனக்கு வருத்தம் அளித்ததாக ஒரு பேட்டியில் கூறினார். அந்த பேட்டி வெளியாகி அடுத்த சில நாட்களிலேயே சிவகார்த்திகேயன் மணமக்களை வாழ்த்தி, திருமண பரிசும் கொடுத்தார். நடிகர் வடிவேலு நேரில் வர இயலாத காரணத்தினால் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்ததோடு, அவரது உதவியாளர்களை அனுப்பி ஒரு லட்சம் ரூபாய் மொய் பணம் அனுப்பியதாக கிங்காங் தெரிவித்தார்.
எமோஷனல்: மேலும், தன்னுடைய மகளின் திருமணத்திற்காக தன்னுடைய சேமிப்பு முழுவதையும் செலவழித்ததாகவும், பணத்திற்காக எந்த பிரபலங்களையும் அழைக்கவில்லை என்றும் கிங்காங் வேதனையுடன் தெரிவித்தது இணையத்தில் வேகமாக பரவியது. திருமண புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவியது. ரசிகர்கள் பலரும் மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மன்சூர் அலிகான்: இந்நிலையில் திருமணத்திற்கு வராத, நடிகர் மன்சூர் அலிகான் ஏற்கனவே வீடியோ ஒன்றை வெளியிட்டு, தான் படப்பிடிப்புத் தளத்தில் இருப்பதால் திருமணத்தில் கலந்து கொள்ளமுடியவில்லை என வருத்தம் தெரிவித்ததோடு மட்டும் இல்லாமல், விரைவில் மணமக்களை சந்திக்க வீட்டுக்கு வருவதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று அதாவது ஜூலை 20ஆம் தேதி மன்சூர் அலிகான், கிங் காங் வீட்டிற்குச் சென்று அவரது மகளையும் மருமகனையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோவை கிங் காங் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், மன்சூர் அலிகானை பார்த்ததும், கிங் காங் மனைவி ஆனந்த கண்ணீர் வடித்ததால், ஏன் அழுகிறீர்கள் என்று ஜாலியாக கேட்டுவிட்டு மணமக்களுடன் உரையாடினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











