ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் அடிதடி.. சிக்கிக்கொண்ட பிரபலங்கள்.. நடந்தது என்ன?
சென்னை: யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு இடம்பெற்ற ஹரிஹரனின் இசைநிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த இசை நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கானோர் வருகை தந்திருந்த நிலையில், பார்வையாளர்கள் கட்டுப்பாடுகளை மீறி தடுப்புகளை உடைத்துக்கொண்டு விஜபி பகுதிக்கு சென்றதால் அங்கு அசம்பாவிதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கை யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் பாடகர் ஹிரிஹரனின் இசை நிகழ்ச்சிக்கும், நட்சத்திரங்களின் நடன நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் முதலில் இது இலவசம் என அறிவித்திருந்தனர். ஆனால், அதன் பிறகு இந்த நிகழ்ச்சியை பணமாக்குவதற்காக ரூ 25 ஆயிரம் ரூபாய், ஏழு ஆயிரம் ரூபாய், மூன்றாயிரம் ரூபாய் என டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. இதில், இலவசமாக நிகழ்ச்சியை பார்க்க வந்தவர்களுக்கான இடம் வெறும் மண் தரையில் இருக்கைகள் மட்டும் போடப்பட்டு, குறைந்த அளவு இடமே ஒதுக்கப்பட்டு இருந்தது.

ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி: ஆனால், நிகழ்ச்சியை காண ஏராளமானோர் வந்ததால், ஒரு கட்டத்திற்கு மேல் அங்கு நிலைமை கையை மீறிப்போனதால், சிறிது நேரம் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. அப்போது, நிகழ்ச்சி தொடர்ந்து நடக்க வேண்டும் என்றால், அனைவரும் அமைதி காக்க வேண்டும் என இந்த இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய டிடி பல முறை கேட்டு கொண்டும் ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இலவசம் என அறிவித்துவிட்டு, பின் அதிக அளவில் டிக்கெட்டை விற்பனை செய்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை ரசிகர்கள் கடுமையாக திட்டினர்.

பயங்கர அடி தடி: மேலும், விஐபிக்கள் இருந்த பகுதியில் ஏராளமான இடமும் இருக்கையும் காலியாக இருந்ததால், இலவசமாக நிகழ்ச்சியை பார்க்க வந்த ரசிகர்கள், விஐபி பகுதிக்கு முண்டி அடித்துக்கொண்டு ஓடினார்கள். அவர்களை, அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் தடுக்க முயன்ற போதும், நிலைமை கட்டுக்குள் வராததால், போலீசார் அவர்களை தடியால் தாக்கினார்கள். பதிலுக்கு அவர்களும் தாக்கியதால், அந்த பகுதியே கலவர பூமியாக மாறியது. இதில் பலர் மயக்கமடைந்து விழுந்ததாகவும், பலர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பலர் படுகாயம்: இதனால், ஒரு கட்டத்தில் நிகழ்ச்சியை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், நிகழ்ச்சியை பாதியில் நிறுத்திவிட்டால், நிலைமை இன்னும் மோசமாகி விடும் என்பதால், அடிக்கடி நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு நிறுத்தப்பட்டு, ஒரு வழியாக ஹரிஹரன் இசை நிகழ்ச்சி நடந்து முடிந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ரம்பா, யோகி பாபு உள்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். 35,000 பார்வையாளர்கள் தான் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிக்கெட்டை அதிகமானோருக்கு விற்று விற்றதால் கிட்டத்தட்ட 1,10,000 பேர் வந்தது தான் இந்த அசம்பாவிதத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை செய்ய இலங்கை அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி: கடந்த ஆண்டு சென்னையில் ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி நடந்த போது அளவுக்கு அதிகமாக டிக்கெட்டுகள் விற்பனை செய்ததால் குவிந்த கூட்டம் காரணமாக அதிருப்தி ஏற்பட்டது. இதில் சில பெண்களுக்கு பாலியல் சீண்டல் நடந்ததாகவும் கூறப்பட்டது. இதையடுத்து டிக்கெட்டுகளுக்கான பணம் திரும்ப கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.


Click it and Unblock the Notifications











