துக்கத்திலும் முதல் பட தயாரிப்பாளரை மறக்காத அஜித்.. வீட்டில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்
சென்னை: தந்தை இறந்த சோகத்திலும் தனது முதல் பட தயாரிப்பாளரை மறக்காத அஜித்தின் குணத்தை பலரும் பாராட்டிவருகின்றனர்.
அமராவதி படம் மூலம் அறிமுகமான நடிகர் அஜித்குமார் தற்போது தமிழின் டாப் ஹீரோக்களில் ஒருவர். 100 கோடி ரூபாய் சம்பளத்தை நெருங்கியிருக்கும் அஜித் அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் தனது 62ஆவது படத்தில் நடிக்கவிருக்கிறார்.

அஜித் தந்தை பாலக்காட்டு சுப்ரமணியம்
அஜித்குமாரின் தந்தை பெயர் சுப்ரமணியம். பாலக்காட்டில் பிறந்து வளர்ந்த தமிழர் ஆவார். இவர் மோகினி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் அஜித்துக்கு மொத்தம் இரண்டு சகோதரர்கள். அண்ணன் தொழிலதிபராகவும், தம்பி ஐஐடியில் பேராசிரியராகவும் இருக்கின்றனர். அஜித்தை போலவே அவர்களும் மீடியா பக்கம் பெரிதாக தலை காண்பிக்கமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மரணமடைந்த சுப்ரமணியம்
சுப்ரமணியம் கடந்த நான்கு வருடங்களாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவந்தனர். நேற்று காலை சிகிச்சை பலனின்றி சுப்ரமணியம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு அஜித்தையும், அஜித்தின் சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் துக்கத்திலிருந்து அஜித்தும் அவரது குடும்பத்தினரும் விரைவில் மீண்டு வர வேண்டும் என பலரும் கூறிவருகின்றனர்.

மின் மயானத்தில் தகனம்
சுப்ரமணியத்தின் உடலானது பெசன் ட் நகரில் இருக்கும் மின் மயானத்தில் நேற்று நண்பகல்வாக்கில் தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதிச்சடங்கு குடும்பத்தினர் மட்டும் பங்கேற்கும் நிகழ்வாக இருக்கும் என அஜித்தும், அவரது சகோதரர்களும் கூறியதால் வெளியாட்கள் யாரும் அதில் கலந்துகொள்ளவில்லை. மின் மயானத்தில் கதறி அழுத தனது தாயை அஜித் தேற்றவும் செய்தார். இதற்கிடையே திரையுலக பிரபலங்கள் சிலர் நேரடியாக அஜித் வீட்டிற்கு சென்று சுப்ரமணியத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அஜித்துக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

அஜித் செய்த நெகிழ்ச்சி செயல்
அஜித்தின் தந்தை சுப்ரமணியத்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய திரையுலகை சேர்ந்தவர்களில் அமராவதி படத்தின் தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கமும் ஒருவர். சுப்ரமணியத்தின் உடலானது ஆம்னி வேனில் வைக்கப்பட்டு பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் அருகில் இருந்த சோழ பொன்னுரங்கத்தை பார்த்த அஜித், காரில் இருந்து இறங்கிவந்து அவருடன் துக்கத்தை பகிர்ந்துவிட்டு நன்றி தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றார். இந்த செயல் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடைய செய்தது.

நன்றி மறக்காத அஜித்குமார்
இந்த செயலை தெரிந்துகொண்ட ரசிகர்கள், தந்தையை இழந்துவிட்ட மிகப்பெரிய துக்கத்தில் இருக்கும்போதும்கூட தனது முதல் பட தயாரிப்பாளரை பார்த்ததும் உடனடியாக் அருகில் சென்று பேசிவிட்டு சென்றிருக்கும் அஜித் உண்மையில் ஜென்டில்மேன்தான் என சமூக வலைதளங்களில் பேசிவருகின்றனர். முன்னதாக, விஜய்யும் அஜித்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











