Aarti Ravi - ஆர்த்தி விளக்கம்.. குழந்தைகள் நலனை நினைக்கவில்லையா ஜெயம் ரவி?.. கேள்வி எழுப்பும் ரசிகர்கள்
சென்னை: ஜெயம் ரவி தனது மனைவியை பிரிவதாக கடந்த ஒன்பதாம் தேதி அறிக்கை வெளியிட்டு அதிர்ச்சியை கொடுத்திருந்தார். மேலும் நீதிமன்றத்திலும் விவாகரத்துக்கு அப்ளை செய்திருக்கிறார். ஆனால் அவரது மனைவி ஆர்த்தி எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த சூழலில் இப்போது அவர் வெளியிட்டிருக்கும் விளக்கத்தை வைத்து ஜெயம் ரவியை ரசிகர்கள் சரமாரியாக கேள்விகளை சமூக வலைதளங்களில் எழுப்பிவருகின்றனர்.
ஆர்த்தி என்பவரை காதலித்து கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் ஜெயம் ரவி. அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 15 வருடங்களாக சுமூகத்துடன் போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை கடந்த சில காலமாகவே பிரச்னைகளில் சிக்கியது. ஆனால் எப்படியாவது இருவரும் தங்களுக்குள் இருக்கும் பிரச்னைகளை பேசி சரி செய்துகொள்வார்கள் என்று ரசிகர்களும், திரைத்துறையினரும் ரொம்பவே நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.

அதிர்ச்சி கொடுத்த ரவி: ஆனால் அதிர்ச்சி தரும் விதமாக ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக கடந்த ஒன்பதாம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் திருமண வாழ்க்கையிலிருந்து விலகுவதாகவும்; நெஞ்சம் கசந்து எடுத்த கனமான முடிவு என்றும் உருக்கத்துடன் தெரிவித்திருந்தார். மேலும் நீதிமன்றத்திலும் விவாகரத்து மனு தாக்கல் செய்திருக்கிறார். ரவி இவ்வாறு கூறினாலும் அவரது மனைவி ஆர்த்தி இதுகுறித்து எந்தக் கருத்தும் கூறாமல் இருந்தார்.
ஆர்த்தியின் விளக்கம்: சூழல் இப்படி இருக்க ஆர்த்தி இன்று தெரிவித்திருக்கும் விளக்கத்தில், "சமீபத்தில் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்த்து நான் கவலையும் மன வேதனையும் அடைந்தேன். இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையுடன் கடந்த 18 வருடங்களாக நான் வாழ்ந்த வாழ்க்கை இந்த அறிக்கையின் மூலம் அதற்குரிய கௌரவம், கண்ணியம் மற்றும் தனித்தன்மையை இழந்து விட்டதாக நான் உணர்கிறேன்.
வாய்ப்பு மறுக்கப்பட்டது: என் கணவரிடம் மனம் விட்டு பேச, என் கணவரை சந்திக்க வேண்டும் என நான் சமீபகாலமாக பலவித முயற்சிகள் செய்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டது. நானும் என் இரண்டு குழந்தைகளும் எதுவும் புரியாமல் தவித்து கொண்டிருக்கிறோம். திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தைச் சார்ந்து அவராகவே எடுத்த முடிவே தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல..
அனுமதிக்க முடியாது: ஆழ்ந்த மன வேதனையில் இருக்கின்ற நிலையிலும் நான் பொதுவெளியில் இது குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்கவே இப்போதும் விரும்புகிறேன். ஆனால் என் மீது குற்றம் சாட்டியும் என் நடத்தையின் மீது களங்கம் கற்பிக்கும் வகையிலும் பொதுவெளியில் மறைமுகமாக நடத்தப்படும் தாக்குதல்களை மிகுந்த சிரமத்துடன் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. ஒரு தாயாக எனக்கு எப்பொழுதும் என் குழந்தைகளின் நலனும், எதிர்காலமுமே முதல் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என் குழந்தைகளை காயப்படுத்துவதை என்னால் அனுமதிக்க இயலாது.
மதிப்பளியுங்கள்: மறுக்கப்படாத பொய்கள் காலப்போக்கில் உண்மையாக நம்பப்படும் என்பதால் இவற்றை மறுப்பதும் என் முதல் கடமையாகிறது. தற்போது இந்த கடினமான காலகட்டத்தில் என் குழந்தைகளுக்கு தேவைப்படும் தைரியத்தையும், மனோதிடத்தையும் அவர்களுடன் ஒருத்தியாக நின்று அவர்களுக்கு வழங்குவதே என் தலையாய கடமை. காலம் நடந்த உண்மைகளை எந்த பாரபட்சமும் இன்றி உணர்த்தும் என்பதை முழுமையாக நம்புகிறேன். இந்த கடின காலத்தை நானும் என் குழந்தைகளும் கடக்கும் வரை எங்கள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
சோதனையிலிருந்து மீள வேண்டும்: இத்தனை காலமாக எங்களுக்கு ஆதரவு மட்டுமன்றி நல்வழி காட்டி வரும் பத்திரிக்கை ஊடக மற்றும் ரசிகப் பெருமக்களுக்கு என் மனமார்ந்த நன்றி உங்கள் அன்பும் ஆதரவும் மட்டுமே என்னையும் என் குழந்தைகளையும் இந்த காலகட்டத்தில் தூணாக காத்து நிற்கும். இந்த சோதனையில் இருந்து நாங்கள் மீண்டு வர உங்கள் பிரார்த்தனைகள் துணை நிற்க வேண்டும் என்று உங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
ரசிகர்கள் கேள்வி: இதற்கிடையே ஜெயம் ரவியின் விவாகரத்துக்கு ஆர்த்தி தரப்புதான் காரணம் என்று பலரும் பலவிதமாக பேசிவந்தார்கள். ஆனால் ஆர்த்தி இப்போது அளித்திருக்கும் விளக்கத்தில், தனது கவனத்துக்கே இது வரவில்லை என்றும்; பிரச்னையை பேசி தீர்க்க முயன்றும் அதற்கு ஜெயம் ரவிதான் வாய்ப்பு கொடுக்கவில்லை என்றும் தெளிவாக கூறியிருக்கிறார். இதனால் பல சந்தேகங்களை ரசிகர்கள் எழுப்ப ஆரம்பித்திருக்கின்றனர்.
அதாவது உண்மையில் தனது தரப்பில் எந்தவிதமான குறையும் இல்லை என்றால் ஆர்த்தி பேச வந்தபோது ஏன் ரவி மறுக்க வேண்டும். நினைத்திருந்தால் பேசி முடித்திருக்க முடியுமே என்று கூறும் ரசிகர்கள்; ஆர்த்தியின் கவனத்துக்கு கொண்டு செல்லாமல்தான் ரவி இந்த முடிவை அறிவித்தாரா என்றும்; குழந்தைகளின் நலனை கொஞ்சம்கூடவா ரவி யோசித்து பார்க்கவில்லை என்றும் கேள்வி எழுப்பிவருகிறார்கள். எது எப்படியோ இந்த விவாகரத்து விவகாரத்தில் இன்னும் பல விஷயங்கள் புதைந்திருக்கின்றன என்று ஆர்த்தியின் ஸ்டேட்மெண்ட் உணர்த்தியிருப்பதாகவும் திரைத்துறையிலிருந்து முணுமுணுப்புகள் கேட்க ஆரம்பித்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications











