அதுக்காக என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.. பைசன் குறித்து கடைசி நேரத்தில் இப்படி சொல்லிட்டாரே மாரி!
சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள படம் பைசன். இந்த படம் நாளை அதாவது அக்டோபர் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. வரும் திங்கட்கிழமை தீபாவளி என்பதால் படக்குழு தீபாவளி ஹாலிடேவையும் மனதில் வைத்து தான் படத்தை வெளியிடுகிறார்கள். இந்நிலையில் ரசிகர்களிடம் படம் குறித்த விஷயத்திற்காக மன்னிப்பு கேட்டுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
பைசன் படத்தை இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் புரெடக்ஷன்ஸ் நிறுவனமும் அப்லாஸ் எண்டெண்டைன்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தில் விக்ரமின் மகன் த்ருவ் விக்ரம் கதாநாயகனாகவும் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள். மேலும் படத்தில், பசுபதி, லால், அமீர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் இயக்குந மாரி செல்வராஜ் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் பல கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதிலை அளித்தார். படத்தின் டைட்டில் குறித்து பேசும்போது, படத்திற்கு பைசன் என ஆங்கிலத்தில் தலைப்பு வைத்ததற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். தயாரிப்பு நிறுவனம் படத்தை தமிழ் நாட்டைக் கடந்து மற்ற மாநிலங்களிலும் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஆங்கிலத்தில் பெயர் வைக்கச் சொன்னார்கள். அதனால்தான் பைசன் என்று ஆங்கிலத்தில் தலைப்பு வைத்தேன். படத்திற்காக நான் எழுதிய திரைக்கதை தொகுப்பில் இன்னும் காளமாடன் என்றுதான் உள்ளது" என்று தெரிவித்தார்.
மன்னிப்புக்கு காரணம்: படத்தின் பெயர் பைசன் என்று வெறுமனே மட்டும் இல்லாமல், பைசன் - காளமாடன் என்றுதான் படக்குழு தரப்பில் பல இடங்களில் அதிகாரப்பூர்வமாக பதிவிடப்படுகிறது. இப்படி இருக்கும்போது, மாரி செல்வராஜ் இவ்வாறு தெரிவித்தது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்து வருகிறது. மாரி செல்வராஜிடம் இந்த கோரிக்கையை அப்லாஸ் நிறுவனத்தின் தரப்பில் இருந்து முன் வைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அரசியலில் ரஞ்சித் : இந்த செய்தியாளர் சந்திப்பில், இயக்குநர் பா. ரஞ்சித் தேர்தலில் அரசியலில் களமிறங்கும் திட்டத்தில் இருக்கிறார்களா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு, " நானும் இதே கேள்வியை அவரிடம் கேட்டிருக்கிறேன். அவரின் புன்சிரிப்பு தான் அதற்கான பதிலாக இருக்கும்; நிச்சயமாக அவர் அரசியலுக்கு வருவார்; அதற்கான முழு தகுதி உடையவர். அவர் எதற்கும் பயப்பட மாட்டார்; களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்; கண்டிப்பாகக் களத்தில் இறங்குவார்" என்று தெரிவித்தார்.
இதை மட்டும் ஏன்?: இது மட்டும் இல்லாமல், தொடர்ந்து தலித் சினிமாக்களை மட்டுமே நீங்கள் எடுக்க காரணம் என்ன? நீங்கள் ஏன் கமர்ஷியல் படங்களைப் போல படங்கள் எடுப்பதில்லை என்ற கேள்வியை மாரி செல்வராஜின் தனிப்பட்ட பேட்டியில் நெறியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு, தமிழ்நாட்டில் தொடர்ந்து தலித் இலக்கியங்கள் வருகிறது, தலித் நாவல்கள் வருகிறது, மாற்றங்களை பேசுகிற நாவல்கள் தொடர்ந்து வெளி வந்து கொண்டுதான் உள்ளது. ஆனால் அதை எதிர்க்காத நபர்கள் இதை மட்டும் ஏன் கேள்விக்குட்படுத்துகிறார்கள்" என்று பதில் அளித்துள்ளார். இவரது இந்த பதிலும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











