Mari Selvaraj: தேவர் மகன் பஞ்சாயத்து... பஞ்சரான மாரி செல்வராஜ் இமேஜ்... தனுஷின் முடிவு என்ன?
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் திரைப்படம் வரும் 29ம் தேதி ரிலீஸாகிறது.
மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் தேவர் மகன் படம் குறித்து மாரி செல்வராஜ் பேசியது சர்ச்சையானது.
இதனால் மாரி செல்வராஜின் இமேஜ் ரொம்பவே டேமேஜ் ஆகி வருவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், கர்ணன் படத்திற்குப் பிறகு மீண்டும் மாரி செல்வராஜ் உடன் இணையவிருந்த தனுஷ், தற்போது என்ன முடிவில் இருக்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மாரி செல்வராஜ் படத்தில் இணைவாரா தனுஷ்?: பரியேறும் பெருமாள் மூலம் இயக்குநராக அறிமுகமான மாரி செல்வராஜ், அடுத்து தனுஷ் ஹீரோவாக நடித்த கர்ணன் படத்தை இயக்கினார். வெற்றிமாறனுக்குப் பிறகு தனுஷை இம்மண்ணின் நாயகனாக அடையாளப்படுத்தியது மாரி செல்வராஜ் தான். வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் ஆடுகளம், அசுரன் ஹிட் அடித்ததை போல, கர்ணன் படமும் வெற்றிப் பெற்றது.
அப்போதே இன்னொரு படத்தில் இணையலாம் என மாரி செல்வராஜ்ஜிடம் கூறியிருந்தார் தனுஷ். அதற்கு முன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கவிருந்தார். ஆனால், உதயநிதி தனது கடைசிப் படத்தை மாரி செல்வராஜ் தான் இயக்க வேண்டும் என விரும்பியதால் எல்லா திட்டங்களும் மாறின. அதன்படி தற்போது உதயநிதியின் மாமன்னன் படத்தை இயக்கியுள்ளார் மாரி செல்வராஜ்.
உதயநிதி, வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ், இசையில் ஏஆர் ரஹ்மான் என முற்றிலும் புது கூட்டணியில் உருவானது மாமன்னன். சேலம் பின்னணியில் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்திலும் அவரது அடையாள அரசியல் இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது. மாமன்னன் அறிவிப்பு வெளியானது முதலே இந்தப் படம் மீது அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது.
இப்போதும் அதே எதிர்பார்ப்பு இருந்தாலும் மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் மாரி செல்வராஜ் பேசியது சர்ச்சையாகி உள்ளது. கமல் முன்னிலையில் தேவர் மகன் படம் குறித்து தனது கருத்துகளை வெளிப்படையாக முன்வைத்தார் மாரி செல்வராஜ். அதற்கு கமல் ஏதும் பதில் சொல்லாத நிலையில், தேவர் மகன் படத்தை மாரி செல்வராஜ் சரியாக புரிந்து கொள்ளவில்லை என பலரும் விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர்.
தேவர் மகன் பட விவகாரத்தில் 'போற்றிப்பாடடி பெண்ணே' பாடலும் அதிகம் சர்ச்சையானது. ஆனால், இதில் கமலுடன் இளையராஜாவுக்கும் பங்கு இருக்கிறது, அதெல்லாம் மாரி செல்வராஜ் கண்களுக்கு தெரியாதா? அதையும் அவர் கேள்வி கேட்க வேண்டும் என விமர்சித்து வருகின்றனர். இந்த பஞ்சாயத்தில் மாரி செல்வராஜின் இமேஜ் டேமேஜ் ஆவது ஒருபக்கம் என்றால், மாமன்னன் படத்திற்கு நெகட்டிவான பப்ளிசிட்டி கிடைத்துவருகிறது.
மாமன்னன் தான் தனது கடைசிப் படம் என கூறிக் கொண்டிருக்கும் உதயநிதி, மீண்டும் நடிக்க வந்தால் அப்போதும் மாரி செல்வராஜ் உடன் தான் இணைவேன் என தெரிவித்திருந்தார். ஆனால், இப்போது அவரே இதுகுறித்து யோசித்து வருகிறாராம். அதேபோ, மாரி செல்வராஜ்ஜுடன் மீண்டும் இணைவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார் தனுஷ். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்கும் என சொல்லப்பட்டது.
மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் தேவர் மகன் குறித்து மாரி செல்வராஜ் பேசியது சர்ச்சையானதால், இப்போது தனுஷ் என்ன முடிவெடுப்பார் என கேள்வி எழுந்துள்ளது. இந்த சர்ச்சையில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க மாரி செல்வராஜ் படத்தில் இருந்து விலகிவிடுவாரோ என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என்றும், மாரி செல்வராஜ் பற்றி எல்லாம் தெரிந்தே தனுஷ் மீண்டும் அவருடன் இணைகிறார் எனவும் சொல்லப்படுகிறது. ஆனாலும் சினிமாவில் எதுவுமே நிரந்தரமான அப்டேட் கிடையாது என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











