Mari Selvaraj - என்னை எல்லோரும் கொல்ல சொன்னார்கள்.. மாரி செல்வராஜ் எமோஷனல் ஷேரிங்ஸ்
சென்னை: சிறு வயதில் என்னை எல்லோரும் கொன்றுவிட சொன்னார்கள் என மாரி செல்வராஜ் எமோஷனலாக பேசியிருக்கிறார்.
மாரி செல்வராஜ். இந்தப் பெயர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாததாக மாற ஆரம்பித்திருக்கிறது. இயக்குநர் ராமிடம் ஆஃபிஸ் பாயாக சேர்ந்து உதவி இயக்குநராக மாறி இப்போது இயக்குநராக உயர்ந்திருக்கிறார் மாரி செல்வராஜ். முதல் படமான பரியேறும் பெருமாள், இரண்டாவது படமான கர்ணன் ஆகிய படங்களில் தன்னுடைய கருத்தை யாருக்கும் அஞ்சாமல் பேசியிருந்தார்.
மாமன்னன்: மூன்றாவது படமாக உதயநிதி, வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரை வைத்து மாமன்னன் படத்தை இயக்கியிருக்கிறார். படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் மாரி செல்வராஜின் பேச்சு சர்ச்சையாக்கப்பட பலரும் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இருப்பினும் படம் இன்று திரையரங்குகளில் நல்லபடியாக ரிலீஸாகியிருக்கிறது.

எப்படி இருக்கிறது?: படத்தை பார்த்த ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்திருக்கின்றனர். வடிவேலு, ஃபகத் பாசில் நடிப்பில் மிரட்டியிருக்கிறார்கள் என்றும் கொண்டாடிவருகின்றனர். குறிப்பாக மாரி செல்வராஜ் இந்தப் படத்திலும் பெரிய அரசியலை அதுவும் ஆளுங்கட்சி அமைச்சரை வைத்தே பேசியிருக்கிறார். தன்னை தூற்றியவர்களுக்கு படத்தின் மூலம் பலமான பதிலடி கொடுத்துவிட்டார் எனவும் படம் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
மாரி செல்வராஜ் பேட்டி: இந்நிலையில் மாரி செல்வராஜ் தனது மனைவி திவ்யாவுடன் இணைந்து கொடுத்த ஒரு பேட்டி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசிய அவர், "எனது அப்பா ரொம்பவே வெகுளித்தனமானவர். அந்த வெகுளித்தனத்தால் அவர் செய்த தவறுகளை, அடைந்த ஏமாற்றங்களை எனது அம்மா சரி செய்திருக்கிறார். எனது அம்மா ரொம்ப தைரியமான ஒரு பெண்.
கொல்ல சொன்னார்கள்: நான் ஐந்தாவது மகனாக பிறந்தேன். அப்போது எங்கள் ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள், "அஞ்சாவதா பொறக்குறவன் குடும்பத்த பஞ்சா பறத்திருவான்' அதனால் இவன் வேண்டாம். நெல்லை போட்டு கொன்று விடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். அதற்கு அம்மாவோ இவனுக்கு முன்னாடி நாலு பேர புள்ளைகளா பெத்தேன். ஆனா இவன என் புருஷனையே புள்ளையா பெத்துருக்கேன் என சொன்னார்.
நிறைய கஷ்டங்கள்: எனது அம்மாவுக்கு நான் நிறைய வலியை கொடுத்திருக்கிறேன். கண்ணீரை கொடுத்திருக்கிறேன். இவன் எப்படி பிழைக்கப்போறானோ என்றுதான் அவர் எல்லாம் நினைத்துக்கொண்டிருந்தார். ஆனாலும் என்னை ரொம்பவே நம்பினார். நம் பிள்ளைகள் சோடை போகாது என்று நினைத்தார். என்னுடைய பெரிய பலம் என்னவென்றால் அம்மாவும், அப்பாவும் உழைத்ததை நாங்கள் ஐந்து பேரும் பார்த்துக்கொண்டே வளர்ந்தோம்" என்றார்.


Click it and Unblock the Notifications











