Mari Selvaraj: கமல் எனக்கு வாத்தியார்... உரிமையுடன் தான் கேள்வி கேட்டேன்... மாரி செல்வராஜ் ஓபன்
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
கடந்த 29ம் தேதி வெளியான இந்தப் படம் இதுவரை 18 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
முன்னதாக மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் கமல் முன்னிலையில் மாரி செல்வராஜ் பேசியது சர்ச்சையானது.
இந்த விவகாரத்தில் கமலிடம் அப்படி பேசியது ஏன் என இயக்குநர் மாரி செல்வராஜ் விளக்கம் கொடுத்துள்ளார்.

கமல் தான் எனக்கு வாத்தியார்: உதயநிதி, வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள மாமன்னன் கடந்த வியாழன் அன்று ரிலீஸானது. மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் சமூக நீதி பேசும் அரசியல் படமாக வெளியாகியுள்ளது. முதல் நாளில் இருந்தே நல்ல ஓபனிங் கிடைத்துள்ள இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸில் 18 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருவதால், இனிவரும் நாட்களிலும் மாமன்னன் வசூல் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் மகிழ்ச்சியான உதயநிதி இன்று மாரி செல்வராஜ்ஜுக்கு மினி கூப்பர் கார் பரிசளித்து சர்ப்ரைஸ் கொடுத்தார். மாமன்னன் வெளியாகும் முன்னரும் ரிலீஸான பின்னரும் பல அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதில் முக்கியமாக மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் மாரி செல்வராஜ் பேசியது சர்ச்சையாகியிருந்தது.
அதாவது தேவர் மகன் படம் குறித்த தனது பார்வையை முன் வைத்த இயக்குநர் மாரி செல்வராஜ், அதனால் தான் மாமன்னன் படத்தை இயக்கியதாகக் கூறினார். அவரின் இந்த கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர வந்தது. அதுமட்டும் இல்லாமல் இயக்குநர் மாரி செல்வராஜ்ஜை கமல் ரசிகர்கள் காட்டமாக விமர்சித்து வந்தனர். அதேநேரம் மாமன்னன் படத்தை கமல்ஹாசனே பாராட்டியிருந்தார்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், "மாமன்னன் படத்தை வாழ்த்துவதற்காக இங்கு வரவில்லை, ஏனெனில் ஏற்கனவே படத்தை பார்த்துவிட்டேன். மாமன்னனின் குரல் எல்லோருக்கும் கேட்க வேண்டும், இப்படியான குரல் இன்னும் அதிகம் உள்ளது. அவையெல்லாம் இப்பதான் கேட்க ஆரம்பித்துள்ளது. மேலும் இது மாரியின் அரசியல் இல்லை, நம்ம அரசியல்" என பேசியிருந்தார்.
இந்நிலையில், மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் முன்னிலையில் அப்படி பேசியது குறித்து மாரி செல்வராஜ் மனம் திறந்துள்ளார். பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டிக் கொடுத்துள்ள மாரி செல்வராஜ், கமல் சார் முன்னால் அப்படி பேசக் காரணமே அவர் மீது தனக்கிருக்கும் உரிமை தான் என்றுள்ளார் மாரி செல்வராஜ். 15 ஆண்டுகளாக சினிமாவில் கஷ்டப்பட்ட எனக்கு தெரியாதா, கமல் சார் பெரிய லெஜண்ட் என்பது எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய மாரி செல்வராஜ், சினிமாவில் கமல்ஹாசன் ஒரு அடையாளம். அவர் தான் எனக்கு வாத்தியார், அதனால் கமல் சாரிடம் அப்படி கேள்விக் கேட்டேன். தனக்கு அதுகுறித்து தெரிந்துகொள்ள ஆசை இருந்ததாகவும், அதனை புரிந்துகொண்டு கமல் சாரும் விளக்கம் கொடுத்ததாகவும் இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். ஆனால், தான் பேசியதை பலரும் தவறாக புரிந்துகொண்டு என்னை விமர்சித்து வருவதாகவும் மாரி செல்வராஜ் வேதனை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











