Mari Selvaraj: வெள்ளத்தில் சிக்கிய மக்கள்... மீட்டெடுத்த மாரி செல்வராஜ்... ட்ரெண்டாகும் வீடியோ
திருநெல்வேலி: சில தினங்களுக்கு முன்னர் நெல்லை, தூத்துக்குடி பகுதிகளில் பெய்த கனமழையால் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது மீட்புப் பணியில் ஈடுபட்ட இயக்குநர் மாரி செல்வராஜ்ஜின் வீடியோ வைரலாகி வருகிறது.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டெடுத்த மாமன்னன்
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் சில தினங்களுக்கு முன்னர் கனமழை கொட்டித் தீர்த்தது. இதில் நெல்லை முதல் திருச்செந்தூர் வரையிலான பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. நெல்லை - திருச்செந்தூர் வரையிலான அனைத்துவிதமான போக்குவரத்துகளும் துண்டிக்கப்பட்டதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

அப்போது நெல்லை பகுதிகளில் நடைபெற்ற மீட்புப் பணிகளில் அமைச்சர் உதயநிதியுடன் இயக்குநர் மாரி செல்வராஜ்ஜும் களமிறங்கினார். அந்த புகைப்படங்கள் வைரலானதோடு மாரி செல்வராஜ் மீது விமர்சனங்களும் எழுந்தன. அதேநேரம் உள்ளூரைச் சேர்ந்த மாரி செல்வராஜ் மீட்புப் பணியில் ஈடுபடுவது சரியானது என அவருக்கு ஆதர குரல்களும் ஒலித்தன. ஆதரவு, விமர்சனங்களை கடந்து மாரி செல்வராஜ் தனது மீட்புப் பணிகளை தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறார்.
இதுகுறித்து டிவீட் செய்திருந்த அவர், "வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டுள்ளன. ஸ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே உள்ள ஆற்றுபாசனத்திற்கு உட்பட்ட அத்தனை கிராமங்களின் நிலையையும் அவ்வளவு கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது. மீட்பு வாகனங்களால் படகுகளால் எதிலும் உள்ளே செல்ல முடியவில்லை, வெள்ளத்தின் வேகம் அப்படியிருக்கிறது" என பதிவிட்டிருந்தார்.
அதேபோல், ஆதிநாதபுரம், செம்பூர், கரையடியூர், மணத்தி, குரும்பூர், உட்பட இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை தொடர்புகொள்ள முடியவில்லை என்பதையும் அவர் தனது அடுத்த டிவிட்டர் பதிவில் சுட்டிக் காட்டியிருந்தார். மேலும், தூத்துக்குடி மாவட்டம் முத்தலாங்குறிச்சியில் சிக்கியிருந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்களை மீட்டது, கருங்குளம் பஸ் ஸடாப் அருகே சிக்கியிருந்தவர்கள் மீட்கப்பட்டது போன்ற தகவல்களையும் டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மாரி செல்வராஜ் மீட்புப் ப்ணியில் ஈடுபட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், ஃபைபர் போட்டில் தனது குழுவினருடன் மக்களை மீட்பதில் மாரி செல்வராஜ் காட்டிய அக்கறையை பாராட்டி வருகின்றனர். முன்னதாக தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த மாரி செல்வராஜ், நான் இயக்குநராக மீட்புப் பணியில் ஈடுபடவில்லை, இது எனது ஊர், எனது மக்கள், நான் இயக்குநராக இல்லையென்றாலும் இப்படித்தான் இருப்பேன் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











