வாழை பட கிளைமேக்ஸ் காட்சியில் டீச்சர் ஏன் இல்லை.. சர்ச்சை கேள்விகளுக்கு மாரி செல்வராஜ் பதிலடி!
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படம் சூரியின் கொட்டுக்காளி முதல் விஜய்யின் கோட் படம் வரை பல படங்களுடன் மோதினாலும் தொடர்ந்து ரசிகர்கள் வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் 400 கோடி பட்ஜெட்டில் உருவான கோட் திரைப்படம் 400 கோடி வசூல் செய்வது லாபகரமான படமா? அல்லது 5 கோடி பட்ஜெட்டில் உருவாகி 40 கோடிக்கும் அதிகமான வசூல் பெற்ற படம் லாபகரமான படமா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

வாழை படத்துக்கு ஒரு பக்கம் ஆதரவு இருந்தாலும் சாரு நிவேதிதாவை போல ஒரு சில எழுத்தாளர்கள் அந்த படத்தை ஆபாச படம் என்கிற அளவுக்கு கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில், நேற்று நடைபெற்ற வெற்றி விழாவில் மாரி செல்வராஜ் பல்வேறு விஷயங்களுக்கு ஓபனாக பதில் அளித்துள்ளார்.
கிளைமேக்ஸில் டீச்சரை காணோம்: பூங்கொடி டீச்சரை சிவனணைந்தான் விரும்புவதாக காட்சிகள் வைக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிராக மாரி செல்வராஜ் ஒரு ஆபாச படத்தை இயக்கியுள்ளார் என்றும் வறுமை மற்றும் விபத்துக் காட்சிகளை வைத்து அழுகையை வியாபாரம் செய்கிறார் என விமர்சனங்கள் குவிந்தன.
மேலும், கிளைமேக்ஸ் காட்சியில் ஊரே கதறி அழும் போது அந்த பூங்கொடி டீச்சர் எங்கே போயிட்டாங்க? என்கிற கேள்வியையும் எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த மாரி செல்வராஜ் பாதகத்தி பாடல் தாமதமாகத்தான் படமாக்கினோம். அப்போது நிகிலா விமலின் கால்ஷீட் கிடைக்கவில்லை. கதைப்படி டீச்சரின் மடியில் தான் சிவனணைந்தன் படுத்துக் கொண்டு அழுவது போன்ற காட்சியை யோசித்து இருந்ததாக கூறியுள்ளார்.
இஸ்லாமிய மக்களுக்கு நன்றி: அந்த லாரி விபத்தில் தனது அக்கா மற்றும் ஊர் காரர்கள் உயிரிழந்த நிலையில், அதை படமாக்கியுள்ள மாரி செல்வராஜ் விபத்தில் உயிரிழந்தவர்களை காப்பாற்றிய இஸ்லாமியர்கள் குறித்து மாரி செல்வராஜ் சொல்லவே இல்லையே ஏன் என்கிற கேள்விக்கு நான் என்னுடைய பார்வையில் மட்டுமே படத்தை பண்ணியுள்ளேன். இஸ்லாமிய சகோதரர்கள், ஜாதி மத பேதம் பார்க்காமல் உதவிய அத்தனை ஊர் மக்களுக்கும் இந்த மேடையில் நன்றி சொல்லிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
வாழை 2 வரும்: சிலருக்கு வாழை புரியவில்லை என்றும் வாழை பிடிக்கவில்லை என்றும் கூறுகின்றனர். சிவனணைந்தானின் கதையும் இன்னமும் அவனுக்குள் சொல்லக் கூடிய கதைகளும் வலியும் இருக்கின்றன. அதை வாழை 2வாக விரைவில் எடுப்பேன் என்றும் மாரி செல்வராஜ் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











