தனுஷ் முதல் ரஜினிகாந்த் வரை.. மாரி செல்வராஜ் லைன் அப் கேட்டாலே சும்மா அதிருதே!
சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித்தை தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக சினிமாவில் ஒலித்து வரும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான மாமன்னன் திரைப்படத்துக்கான சிறந்த துணை நடிகருக்கான பிலிம்ஃபேர் விருதை பகத் ஃபாசில் சமீபத்தில் வென்றார்.
வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் என அனைவரது நடிப்பும் மாரி செல்வராஜின் இயக்கமும் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வாழை' படம் வெளியாகிறது.

நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். அடுத்ததாக துருவ் விக்ரமை வைத்து பைசன் படத்தை இயக்கி வரும் மாரி செல்வராஜின் பெரிய லைன் அப் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
மீண்டும் தனுஷ் உடன்: பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமான மாரி செல்வராஜ் முதல் படத்திலேயே தான் யார் என்பதை நிரூபித்து விட்டார். அவரது உழைப்பை பார்த்து வியந்து போன தனுஷ் உடனடியாக கர்ணன் படத்தில் நடித்தார். அந்த படம் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில், பைசன் படத்தை விரைவில் முடிக்கவுள்ள மாரி செல்வராஜ் மீண்டும் தனுஷ் படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கார்த்தியை வைத்து ஒரு படம்: பா. ரஞ்சித் இயக்கத்தில் மெட்ராஸ் படத்தில் நடித்த கார்த்தியை வைத்தும் ஒரு படத்தை மாரி செல்வராஜ் இயக்கவுள்ளாராம். தனுஷ் படத்தை முடித்த கையோடு கார்த்தியை மாரி செல்வராஜ் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கங்குவா, சர்தார் 2, மெய்யழகன், வா வாத்தியார், கைதி 2 என கார்த்தி கைவசம் ஏகப்பட்ட படங்கள் உள்ள நிலையில், மாரி செல்வராஜ் படத்திலும் நடிக்க முடிவு செய்திருப்பதாக கூறுகின்றனர்.
சூப்பர் ஸ்டாரை இயக்கப்போறாரா?: பரியேறும் பெருமாள் படத்தில் இருந்து மாரி செல்வராஜ் இயக்கும் ஒவ்வொரு படமும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ரொம்பவே பிடித்த படங்களாக மாறியுள்ளன. ரஜினிகாந்துக்கும் மாரி செல்வராஜ் ஒரு கதை சொல்ல அவருக்கும் பிடித்து விட்டதாக கூறுகின்றனர். கூலி படத்தை முடித்து விட்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க நிறைய வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறுகின்றனர்.
விஜய் மிஸ் ஆகிட்டாரே: நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரான மாரி செல்வராஜ் எப்படியாவது தளபதி விஜய்யை வைத்து ஒரு படம் பண்ணிட வேண்டும் என நினைத்து சில கதைகளையும் அவருக்கு சொல்லியிருக்கிறார். ஆனால், ரசிகரின் பார்வையில் இருந்து ஒரு கதையை ரெடி பண்ணி கொண்டு வாங்க என விஜய் சொல்லி விட்டாராம். ஆனால், தற்போது அதற்குள் அவர் அரசியலுக்கு செல்லவுள்ளதால் விஜய்யை இயக்கும் வாய்ப்பு மிஸ் ஆகி விட்டது என மாரி செல்வராஜ் ரொம்பவே ஃபீல் பண்ணி வருவதாக கூறுகின்றனர்.
தளபதி 69: மாமன்னன் படம் உதயநிதி ஸ்டாலினுக்கு கடைசி படமாக அரசியல் களத்துடன் அமைந்ததை போல மாரி செல்வராஜ் இயக்கத்தில் விஜய் தளபதி 69 படம் நடித்திருந்தாலும் சிறப்பாக இருந்திருக்கும் என அவரது ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், அந்த வேலையை தற்போது எச். வினோத் சிறப்பாக செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்தை இயக்கிய வெங்கட் பிரபுவை தொடர்ந்து எச். வினோத்துக்கும் விஜய் படம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











