Mari Selvaraj - யாரையும் தொந்தரவு செய்யாமல் வாழ வேண்டும்.. மாரி செல்வராஜ் அட்வைஸ்
சென்னை: Mari Selvaraj (மாரி செல்வராஜ்) கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் மாரி செல்வராஜ் யாரையும் தொந்தரவு செய்யாமல் வாழ வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பல வருடங்கள் இருந்துவிட்டு பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் மாரி செல்வராஜ். கதிர், யோகி பாபு, கயல் ஆனந்தி, மாரிமுத்து உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியானது. காதலையும், அதன் ஊடாக நடக்கும் சாதிய அட்டூழியங்களையும் அப்படம் அப்பட்டமாக பேசியிருந்தது. இதற்கிடையே மாரி செல்வராஜ் தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் உள்ளிட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

கவனம் ஈர்த்த மாரி: படத்தை பார்த்த ரசிகர்கள் முதல் படத்திலேயே மாரி செல்வராஜ் தான் எவ்வளவு தேர்ந்த படைப்பாளி என்பதை நிரூபித்துவிட்டார் என்றும், சென்சிட்டிவ் விஷயத்தை தொட்டு அதை மிக நேர்த்தியாக படைத்திருக்கிறார் என்றும் பாராட்டு தெரிவித்தனர். அதையடுத்து அவர் இயக்கிய கர்ணன் திரைப்படமும் ஹிட்டானது. சூழல் இப்படி இருக்க கடைசியாக அவர் உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் படத்தை இயக்கினார்.
மெகா ஹிட்: உதயநிதிக்கு கடைசி படமாக அது அறிவிக்கப்பட்டது. படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது அமோக வரவேற்பை கொடுத்தனர். 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. அதுமட்டுமின்றி யாரும் பேசாத அரசியலை மாரி செல்வராஜ் பேசியிருக்கிறார் என்றும் கூறினர். அடுத்ததாக சிறுவர்களை வைத்து அவர் வாழை படத்தை இயக்கியிருக்கிறார்.
மாரி பேச்சு: இந்நிலையில் கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்ட மாரி செல்வராஜ், "நிறைய படித்தவர்கள் இந்த மேடையில் இருக்கிறார்கள். அவர்களை அனைவருக்கும் தெரிவதில்லை. ஆனால் மாரி செல்வராஜ் என்று சொன்னதும் தெரிகிறது. அதற்கு காரணம் நான் கலை வழி இயங்குவதும், அறம் சார்ந்து பேசுவதும் ஆகும். என்ன ஆகப்போகிறேன் என்று தெரியாமல் இருந்த என்னை கலை இப்படி மாற்றியிருக்கிறது.
தனிமையை கொண்டாடுங்கள்: தனிமையை கொண்டாடுங்கள். சின்ன சின்ன பேப்பரைக்கூட படிக்காமல் விடமாட்டேன். புத்தகம் படிக்கும்போது என்னை எல்லோரும் பைத்தியக்காரன் என்று சொன்னார்கள். ஆனால் அந்தப் புத்தகங்கள்தான் இந்த அளவுக்கு என்னை மாற்றி இருக்கிறது. நாம் சக மனிதர்களை மனிதனாக மதிக்க வேண்டும். அவர்களோடு நன்றாக பேச வேண்டும்.
தொந்தரவு வேண்டாம்: வாழ்க்கையில் நாம் வெல்கிறோமோ இல்லை தோற்கிறோமோ. அதையெல்லாம்விட முக்கியம் யாரையும் காயப்படுத்தாமல், தொந்தரவு செய்யாமல் வாழ வேண்டும். இந்த மாதிரியான மேடைகளில் நான் ஏறி பேசும்போதுதான் சரி நாமும் நல்ல படங்களைத்தான் எடுத்திருக்கிறோம் என்ற தெம்பு கிடைக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











