Mari Selvaraj: ஜப்பானில் மகனைத் தொலைத்த மாரி செல்வராஜ்.. பெரிய துயரத்திற்கு தயாரானதாக பேச்சு!
சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்து வெளியாக உள்ள படம் பைசன். அதையடுத்து நடிகர் தனுஷை வைத்து ஒரு படம் பண்ணவுள்ளார். இதற்கான அறிவிப்பும் வெளியானது. இந்நிலையில் இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியாகவுள்ள படமான பறந்து போ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயக்குநர் மாரி செல்வராஜ் சமீபத்தில் ஜப்பானுக்குச் சென்றபோது நடந்த சம்பவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.
நான் இயக்குநர் ராம் சாரிடம் இணைந்த பின்னர் அவரும் நானும் அதிகம் பார்த்த படங்கள் என்றால் அது காமெடி படங்கள்தான். களவாணி படத்தை திரையரங்கில் பார்த்துவிட்டு இதுபோல என்னை படம் எடுக்கச் சொன்னார். நாங்கள் அதிகம் பேசிக்கொண்டது, அதிகம் பார்த்தது எல்லாமே காமெடி படங்கள் தான். ஈழப்பிரச்னையின் போது ராம் சார் மிகவும் காத்திரமான அரசியல் பேசினார். அதுதான் சினிமா மீதான எனது பார்வையை மாற்றியது.
எனது குழந்தைகளுக்கு பெயர் வைத்தது ராம் சார் தான். அவர் வாரத்திற்கு ஒரு முறையாவது போன் செய்து எனது மகன் குறித்து விசாரிப்பார். மேலும் அவரது மகன் குறித்து பல விஷயங்களைப் பேசுவார். இதனால் எனக்கும் ஆசையாக இருக்கும், நாம் எப்போது நமது மகன் குறித்து ராம் சாரிடம் பெருமையாக பேசப்போகிறோம் என. சமீபத்தில் நான் குடும்பத்துடன் ஜப்பானுக்குச் சென்றிருந்தேன். அப்போது மகனை அவனது பாட்டியுடன் ஒரு அறையில் தூங்க வைத்துவிட்டு நண்பர் ஒருவரைப் பார்க்க நாங்கள் அனைவரும் புறப்பட்டு விட்டோம்.

மகனைக் காணவில்லை: நாங்கள் திரும்பி வரும்போது, எனது மனைவியின் அம்மா போன் செய்து மகனைக் காணவில்லை என்று சொல்லி அழுகிறார். அறைக்குள் தூங்கிக் கொண்டு இருந்த பையன் எப்படி காணாமல் போவான் என்ற கேள்வியும், அதுவும் ஜப்பானில் எப்படி காணாமல் போவான் என்றும் கேள்வி எழுந்தது. எனது மகனுக்கு ஒரு அறைக்குள்ளோ, ஒரு லிஃப்ட்க்குள்ளோ செல்லத் தெரியும். ஆனால் வெளியே வரத் தெரியாது. அவனது பாட்டி போன் செய்து அழுது கொண்டே இருக்கிறார். எனது மனதிற்குள் பயம் தொற்றிக் கொண்டது. சரி வாழ்வில் ஒரு பெரிய துயரத்திற்கு நாம் தயாராக வேண்டியதுதான் என மனதிற்குள் தோன்றுகிறது.
கண்களில் கண்ணீர்: நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்ததும், ஹோட்டலின் வரவேற்பறையில் இரண்டு பெண்களுக்கு நடுவே உட்கார்ந்திருந்தான். நான் அவனைப் பார்த்ததும் ஓடிச் சென்று தூக்கி விட்டேன். அவன் கண்களில் கண்ணீர் இருந்ததை நான் பார்த்தேன். அறையில் இருந்தவன் இங்கு எப்படி வந்தான் என்றால், அறையில் தூங்கிக் கொண்டு இருந்தவன், தான் அணிந்திருந்த பேம்பர்ஸை கழட்டிவிட்டு சட்டை , பேண்ட் மற்றும் ஷூ போட்டுக் கொண்டு அறையில் இருந்து வெளியேறியுள்ளான்.

டைரக்டர் மாரி செல்வராஜ்: அதன் பின்னர், நான் தங்கியிருந்த அறையை திறக்க முயற்சி செய்துள்ளான். அந்த அறை பூட்டியுள்ளது. அதேபோல், பாட்டி தூங்கிக் கொண்டு இருந்த அறையையும் திறக்க முயற்சி செய்துள்ளான், திறக்க முடியவில்லை. இதனால் அந்த வளாகம் முழுவதும் இருந்த அறைகளைத் தட்டியுள்ளான். இதனால் ஒரு அறையில் இருந்து வெளியே வந்த இரண்டு பெண்கள் அவனிடம் யார் என்று கேட்டதற்கு, அவர்களிடத்தில் பேப்பரில் டைரக்டர் மாரி செல்வராஜ் என எழுதிக் கொடுத்துள்ளான்.
ராம் ரியாக்ஷன்: அதன் பின்னர் அவர்கள் அவனை கீழே வரவேற்பறைக்கு அழைத்துவந்து, விசாரித்துள்ளார்கள். நாங்கள் வந்திருப்பதை உறுதி செய்த பின்னர் அங்கேயே அமர்ந்து பேசிக் கொண்டு இருந்துள்ளார்கள். இது தொடர்பாக நான் பெருமையாக என் மகன் எந்த அளவுக்கு வளர்ந்துள்ளான் என்பதை ராம் சாரிடம் கூறினேன். உடனே அவர் சொன்னது, இனிமேல் உனது சினிமா மாறும், மற்றவர்கள் மீது நம்பிக்கை வரும்" என்று கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக மாரி செல்வராஜ் பகிர்ந்தது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











