ஆஃபிஸ் பாய் டூ அசோசியேட் டைரக்டர்.. சாப்பாடு வாங்கி கொடுத்த அந்த நபர்.. மாரி செல்வராஜ் ஷேரிங்ஸ்
சென்னை: Mari Selvaraj (மாரி செல்வராஜ்) மெரீனா பீச்சில் பசியோடு படுத்திருந்த தனக்கு ஒருவர் உணவு வாங்கி கொடுத்ததாக இயக்குநர் மாரி செல்வராஜ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பல வருடங்கள் இருந்துவிட்டு பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் மாரி செல்வராஜ். கதிர், யோகி பாபு, கயல் ஆனந்தி, மாரிமுத்து உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியானது. காதலையும், அதன் ஊடாக நடக்கும் சாதிய அட்டூழியங்களையும் அப்படம் அப்பட்டமாக பேசியிருந்தது. இதற்கிடையே மாரி செல்வராஜ் தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் உள்ளிட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

கவனம் ஈர்த்த மாரி: படத்தை பார்த்த ரசிகர்கள் முதல் படத்திலேயே மாரி செல்வராஜ் தான் எவ்வளவு தேர்ந்த படைப்பாளி என்பதை நிரூபித்துவிட்டார் என்றும், சென்சிட்டிவ் விஷயத்தை தொட்டு அதை மிக நேர்த்தியாக படைத்திருக்கிறார் என்றும் பாராட்டு தெரிவித்தனர். குறிப்பாக அந்தப் படம் முடியும்போது அவர் வைத்த க்ளைமேக்ஸ் ஷாட் படம் வெளியானபோது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று மாரி செல்வராஜ் மீது பலரது கவனத்தை திருப்பியது. பாரதிராஜாவே அந்த ஷாட்டை பாராட்டியிருந்தது நினைவுகூரத்தக்கது.
கர்ணன் மாரி: முதல் படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். கொடியங்குளத்தில் எளிய மக்கள் மீது அதிகாரவர்க்கத்தினர் நடத்திய அராஜகத்தை மையமாக வைத்து உருவாகியிருந்த அந்தப் படம் ஹிட்டானாலும் பரியேறும் பெருமாளில் இருந்த அடர்த்தி இந்தப் படத்தில் இல்லை என்ற விமர்சனத்தையும் சந்தித்தது. அப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருந்தார். இருப்பினும் இரண்டு படங்களிலேயே மாரி செல்வராஜ் முன்னணி இயக்குநராகிவிட்டார்.
மாமன்னன்: இப்படிப்பட்ட சூழலில் உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் படத்தை இயக்கியிருந்தார். வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த ஜூன் மாதம் படம் ரிலீஸானது. படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய விமர்சனம் கிடைத்தது. அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் வாழை படம் ரிலீஸாகவிருக்கிறது.
சொல் வழி பயணம்: இந்நிலையில் பவா செல்லதுரையின் சொல் வழி பயணம் நிகழ்ச்சியில் மாரி செல்வராஜ் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "இலக்கிய வாசமே இல்லாமல் இருந்த என் அண்ணன் தற்போது இலக்கியம் பற்றி நிறைய பேசுகிறார். அதற்கு காரணம் பவா செல்லதுரைதான். எழுத்தாளனாக இருக்கும் சுதந்திரம் சினிமாவில் இல்லை என்பதுதான் உண்மை. இந்த விழாவுக்கு வரும்போது ஏன் நாம் திரும்ப எழுதக்கூடாது என்று தோன்றியது.
அய்யா வழி: மாமன்னன் படத்தில் அய்யா வழி மனிதர் ஒருவர் எதற்காக அந்த சிறுவனுக்கு உதவுவது போல் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறது என கேள்வி எழுப்பினார்கள். ஆனால் என்னை மெரீனா பீச்சில் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் பசியோடு படுத்துக் கிடந்த எனக்கு சாப்பாடு வாங்கிக்கொடுத்தவர் அப்படிப்பட்ட வெள்ளை நாமம் போட்ட நபர்தான். அவர் இப்போது எனது வாழ்க்கையிலிருந்து மறைந்துவிட்டார்.
ஆஃபிஸ் பாய் டூ அசோசியேட் டைரக்டர்: என் வாழ்க்கையில் நடந்த உண்மை கதையை ஒரு நாள் இரவில் ராம் சாரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். அப்போது நான் ஆபீஸ் பாயாக இருந்தேன்.அந்த கதையை சொல்லும்வரை ஆபீஸ் பாயாக இருந்த நான் அடுத்த நாளிலிருந்து தங்கமீன்கள் படத்தில் அசோசியேட் டைரக்டர் ஆனேன். பவா செல்லத்துரையை எனக்கு ரொம்பவே பிடிக்கும். அதற்கு காரணம் என் இயக்குநர் ராம் சார் பவாவின் கன்னத்தில் முத்தம் கொடுத்திருக்கிறார்" என்றார்.


Click it and Unblock the Notifications











