Mari Selvaraj on Vadivelu - வடிவேலுவை அதை மட்டும் செய்யவிடவில்லை - மாரி செல்வராஜ் ஓபன் டாக்
சென்னை: Mari Selvaraj (மாரி செல்வராஜ்) மாமன்னன் படத்தில் வடிவேலுவிடம் வேலை வாங்கிய அனுபவம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பல வருடங்கள் இருந்துவிட்டு பரியேறும் பெருமள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் மாரி செல்வராஜ். கதிர், யோகி பாபு, கயல் ஆனந்தி, மாரிமுத்து உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியானது. காதலையும், அதன் ஊடாக நடக்கும் சாதிய அட்டூழியங்களையும் அப்படம் அப்பட்டமாக பேசியிருந்தது.

கவனம் ஈர்த்த மாரி: படத்தை பார்த்த ரசிகர்கள் முதல் படத்திலேயே மாரி செல்வராஜ் தான் எவ்வளவு தேர்ந்த படைப்பாளி என்பதை நிரூபித்துவிட்டார் என்றும், சென்சிட்டிவ் விஷயத்தை தொட்டு அதை மிக நேர்த்தியாக படைத்திருக்கிறார் என்றும் பாராட்டு தெரிவித்தனர். குறிப்பாக அந்தப் படம் முடியும்போது அவர் வைத்த க்ளைமேக்ஸ் ஷாட் படம் வெளியானபோது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று மாரி செல்வராஜ் மீது பலரது கவனத்தை திருப்பியது. பாரதிராஜாவே அந்த ஷாட்டை பாராட்டியிருந்தது நினைவுகூரத்தக்கது.
கர்ணன் மாரி: முதல் படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். கொடியங்குளத்தில் எளிய மக்கள் மீது அதிகாரவர்க்கத்தினர் நடத்திய அராஜகத்தை மையமாக வைத்து உருவாகியிருந்த அந்தப் படம் ஹிட்டானாலும் பரியேறும் பெருமாளில் இருந்த அடர்த்தி இந்தப் படத்தில் இல்லை என்ற விமர்சனத்தையும் சந்தித்தது. அப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருந்தார். இருப்பினும் இரண்டு படங்களிலேயே மாரி செல்வராஜ் முன்னணி இயக்குநராகிவிட்டார்.
மாமன்னன்: இப்படிப்பட்ட சூழலில் உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் படத்தை இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். இதில் வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இதில் வடிவேலுவுக்கு முக்கியமான கதாபாத்திரம் என்றும், வழக்கமான பாணியில் வடிவேலு இதில் இருக்கமாட்டார் என்றும் படத்தின் போஸ்டர்களை பார்க்கும்போது தெரிந்துகொள்ள முடிகிறது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்து முடிந்தது.

மாரி பேட்டி: இந்நிலையில் மாரி செல்வராஜ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "நான் திரையில் பார்த்து சிரித்து ரசித்த மனிதர் வடிவேலு. அப்படி நான் எதை பார்த்து அவரை கொண்டாடினேனோ அதை மாமன்னனில் அவரை செய்யவிடாமல் வேறு ஒரு வகையில் அவரை நடிக்க வைத்திருக்கிறேன் என்பதுதான் உண்மை.
பல்டி அடித்து சிரித்தார்கள்: படத்தில் அவருக்கு சீரியஸான கதாபாத்திரம் என்றாலும் செட்டில் வடிவேலு அவரது இயல்பான நகைச்சுவை உணர்வால் அனைவரையும் சிரிக்க வைத்துகொண்டுதான் இருப்பார். வடிவேலு ஒரு கதையை சொல்லும்போது அதை சொல்லி மட்டும் காட்டாமல் நடித்தும் காட்டுவார். அவர் அடிக்கும் நகைச்சுவையைக் கேட்டு ஃபஹத் , கீர்த்தி சுரேஷ் இருவரும் பல்டி அடித்து சிரித்தார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











