காதல் படம் எடுக்க சபதம் போட்டிருக்கும் மாரி செல்வராஜ்.. அதுவும் அந்தப் படம் மாதிரி எடுப்பாராம்
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடைசியாக உருவான திரைப்படம் வாழை. அது மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்போது விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து பைசன் - காளமாடன் படத்தை இயக்கும் அவர் அடுத்ததாக தனுஷை வைத்து ஒரு படம் இயக்கப்போகிறார். ஏற்கனவே அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து கர்ணன் என்ற படத்தை கொடுத்தார்கள். எனவே இந்தப் படத்தின் மீதும் ரசிகர்களுக்கு உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. இந்நிலையில் மாரி செல்வராஜ் எடுத்திருக்கும் சபதம் குறித்து தெரியவந்திருக்கிறது.
ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் மாரி செல்வராஜ். கற்றது தமிழ், தங்க மீன்கள் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக இருந்த அவர் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்தையே தரமாக கொடுத்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன்னை பார்க்க வைத்தார். அந்தப் படத்தில் வந்த வசனங்கள், க்ளைமேக்ஸ் ஷாட் என அனைத்துமே பக்காவாக இருந்ததன் காரணமாக படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

கர்ணன்: பரியேறும் பெருமாள் படத்தை முடித்துவிட்டு தனுஷை வைத்து கர்ணன் திரைப்படத்தை இயக்கினார் மாரி. அந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். உண்மை சம்பவத்தை வைத்து அந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தாலும் வரலாற்றை மாரி செல்வராஜ் திரித்து படத்தில் காட்டிவிட்டார் என்று விமர்சனங்கள் எழுந்தன. அதேசமயம் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல ஹிட்டையே பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மாமன்னன் மாரி: இரண்டு படங்களின் வெற்றிக்கு பிறகு உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் படத்தை இயக்கினார் அவர். இந்தப் படமும் யாரும் பேசாத அரசியலை பேசியது. உதயநிதிக்கு இது கடைசி படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. முக்கியமாக வடிவேலு பல வருடங்களுக்கு பிறகு இந்தப் படத்தில் தரமான கம்பேக் கொடுத்தார். அவரை இன்னொரு பரிணாமத்தில் மாரி செல்வராஜ் காட்டியிருந்தது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி அப்ளாஸை அள்ளிக்கொடுத்தது.
கொண்டாடப்பட்ட வாழை: இப்படி மூன்று படங்கள் இயக்கிய அவர் நான்காவது படமான வாழையில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த துயர சம்பவங்களை பேசினார். அதுவும் பெரும்பாலானோரால் கொண்டாடப்பட்டது. ஆனால் எழுத்தாளர் சாரு நிவேதிதா உள்ளிட்டோரால் விமர்சனம் செய்யப்பட்டது. அடுத்ததாக அவர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து பைசன் - காளமாடன் என்ற படத்தை இயக்கிவருகிறார். இதனை முடித்துவிட்டு தனுஷை வைத்து ஒரு படம் இயக்கப்போகிறார்.
மாரியின் சபதம்: இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "காமெடி படம் செய்வதற்கு என்னிடம் கதைகள் எதுவும் இல்லை. ஆனால் நான் விண்ணைத்தாண்டி வருவாயா மாதிரி ஒரு காதல் படம் எடுக்க வேண்டும் என்று எனது மனைவி திவ்யா கேட்டிருக்கிறார். முழுக்க முழுக்க காதல் சார்ந்த படமாக அது இருக்கும் என்று மனைவியிடம் சபதம் எடுத்திருக்கிறேன். கண்டிப்பாக அந்த மாதிரி ஒரு படத்தை நிச்சயம் எடுப்பேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











