தமிழினப் படுகொலையை உலகறியச் செய்த மேரி கால்வினின் வாழ்க்கை படமாகிறது
சென்னை: இலங்கைப் போரை உலகுக்கு காட்டிய பத்திரிகையாளர் மேரி கால்வினின் வாழ்க்கை ஹாலிவுட்டில் படமாகிறது.
யுத்தம் எனக்கு அவசியமில்லை. ஆனால் நான் யுத்தத்தைத் தேடிப் போகிறேன் என்றவர் அமெரிக்க பத்திரிகையாளர் மேரி கால்வின்.

விடுதலைப்புலிகளுக்கு எதிராக போரிடுகிறோம் என சூளுரைத்துவிட்டு ராஜபக்ஷே அரசு தமிழின அழிப்பை முனைப்பாக செயல்படுத்திக்கொண்டிருந்த காலகட்டத்தில் இலங்கைப் போரின் உண்மைகளை உலகறியச் செய்தவர்.
2001 ஆம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்துகொண்டிருந்தபோது வன்னி பகுதிகளுக்கு செல்ல பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த தடைகளை பொருட்படுத்தாமல் உயிரைப் பணயம் வைத்து செய்தி சேகரித்தார் மேரி கால்வின். அமெரிக்காவில் பிறந்த மேரி கால்வின் இங்கிலாந்திலிருந்து வெளியாகும் பிரபல சண்டே டைம்ஸ் பத்திரிகையில் வெளிநாட்டு செய்தியாளராக பணியாற்றினார்.
உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து கொண்டிருந்த நேரத்தில், வன்னி பகுதியில் செய்தி சேகரித்துக்கொண்டு வெளியேறும்போது ராணுவத்தின் கண்ணில் பட்டுவிட்டார். கண்மூடித்தனமாக ராணுவத்தினர் சுட்டதில் இடது கண்ணை இழந்தார் மேரி. மேலும், இலங்கை ராணுவத்தினர் மேரியின் ஆடைகளைக் கிழித்து நிர்வாணமாக்கினர்.
இந்தத் தாக்குதல் சம்பவம் பற்றி சண்டே டைம்ஸ் பத்திரிகையில் எழுதிய மேரி, இலங்கை தமிழர்களை விட நான் ஒன்றும் பெரிதாக கொடுமையை அனுபவிக்கவில்லை என்றாலும் என்னுடைய அனுபவம் தமிழ் மக்களின் வேதனையைச் சொல்ல போதுமானது எனக் குறிப்பிடுகிறார்.
பிறகு அரபு நாடுகளிலும், ஐரோப்பாவின் கொசோவோ, ரஷ்யாவின் ஷெசென்யாவில் பணியாற்றிய மேரி, 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி சிரியாவில் கொல்லப்பட்டார். சிரியாவில் போர் நடந்தபோது செய்தி சேகரித்துக்கொண்டிருந்த மேரி, ஒரு கட்டடத்தின் மீது நிகழ்த்தப்பட்ட ராக்கெட் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். செய்தி சேகரித்த காகிதங்களையும், காலணிகளையும் எடுக்க ஓடியபோது ராக்கெட் தாக்குதலுக்கு பலியானார் மேரி. அவருடன் பிரெஞ்ச் பத்திரிகையாளர் ரெமி ஓச்லிக்கும் கொல்லப்பட்டார்.ஏறத்தாழ 26 வருடங்கள் பத்திரிகையாளரக பணியாற்றிய மேரி கால்வின், 17 வருடங்கள் போர்ச் சூழலிலேயே பெரும்பான்மையான நாட்களை கழித்துள்ளார்.
இறந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, மேரி கால்வினின் வாழ்க்கை படமாக எடுக்கப்படுகிறது. எ பிரைவேட் வார் என்ற தலைப்பில் படமாக்கப்படுகிறது. சிட்டி ஆப் கோஸ்ட், எஸ்கேப் பயர் போன்ற படங்களை எடுத்த மேத்தீவ் ஹெய்ன்மேன் இப்படத்தை இயக்குகிறார். இதில் மேரி கால்வினாக டை அனதர் டே, கான் கேர்ள் படங்களில் புகழ்பெற்ற ரோசமண்ட் பைக் நடிக்கிறார். மேலும் தமிழ்ச்செல்வன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளரும் நடிகருமான ஷோபா சக்தி நடிக்கிறார்.


Click it and Unblock the Notifications











