சண்டை வந்தாலும் இளையராஜாவை விட்டுக்கொடுக்காத வைரமுத்து - உதவியாளர் பகிர்ந்துகொண்ட சுவாரஸ்யம்
சென்னை: இளையராஜா குறித்தும் வைரமுத்து குறித்தும் மாரிமுத்து பேட்டி ஒன்றில் சுவாரஸ்யமான விஷயத்தை பகிர்ந்துகொண்டார்.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் - பாடலாசிரியர் கூட்டணி தவிர்க்க முடியாதது. எம்.எஸ்.வி - கண்ணதாசன், இளையராஜா - வாலி, யுவன், ஜிவி - நா. முத்துக்குமார், ஹாரிஸ் - தாமரை என அந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். அப்படி யாராலும் மறக்கமுடியாத கூட்டணி இளையராஜா - வைரமுத்து.

இளையராஜா - வைரமுத்து கூட்டணி
வைரமுத்து முதல்முதலாக நிழல்கள் படத்தில் இடம்பெற்ற இது ஒரு பொன்மாலை பொழுது பாடலை எழுதினார். பாரதிராஜா இயக்கிய அந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். முதல் படத்திலேயே வைரமுத்து வானம் எனக்கொரு போதி மரம் என சிறப்பாக எழுதி இளையராஜாவிடம் தன்னை நிரூபித்தார். அதன் பிறகு இருவரும் இணைந்த கொடுத்த பாடல்கள் எல்லாம் காலத்தால் அழியாதவை.

இருவரும் இணைந்து கொடுத்த சூப்பர் ஹிட் பாடல்கள்
இருவருக்குமான ரிதம் ஒத்துப்போன பிறகு ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்தனர். அந்தப் பாடல் இளையராஜாவின் இசையால் வென்றதா இல்லை வைரமுத்துவின் வரிகளால் வென்றதா என்று ரசிகர்கள் யோசிக்கும் அளவுக்கு இருவரும் உழைத்திருப்பார்கள். அப்படி அவர்கள் கொடுத்த முதல் மரியாதை, மண் வாசனை, புன்னகை மன்னன் உள்ளிட்ட ஏராளமான படங்களின் பாடல்கள் இன்றுவரை பலரது மனதை கொள்ளையடித்துக்கொண்டிருப்பவை.

மோதலில் முறிந்த கூட்டணி
இன்னும் பல காலம் இருவரும் இணைந்து ஏகப்பட்ட பாடல்களை கொடுப்பார்கள் என ரசிகர்கள் நினைத்திருந்த சூழலில் இருவருக்குள்ளும் ஏதோ ஒரு காரணத்தால் மோதல் ஏற்பட இருவரும் பிரிந்துவிட்டனர். அவர்கள் பிரிந்து 30 வருடங்களுக்கும் மேல் ஆனாலும் மீண்டும் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டுமென்பது இசை மற்றும் தமிழ் ரசிகர்களின் ஆவலாக இருக்கிறது. அதற்கான முயற்சிகள் ஆரம்பக்கட்டத்தில் கோலிவுட்டில் பலர் எடுத்தாலும் அதற்கு பலன் தரவில்லை.

வைரமுத்து உதவியாளர் கொடுத்த பேட்டி
இந்நிலையில் நடிகரும், வைரமுத்துவிடம் உதவியாளராகவும் இருந்த மாரிமுத்து அளித்த பேட்டி ஒன்றில் இளையராஜா குறித்து வைரமுத்து பேசியதை பகிர்ந்திருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "ஒருகாலத்தில் வைரமுத்துவை இளையராஜா தனது மடியில் வைத்து சோறூட்டினார். ஆனால் என்ன நினைத்தாரோ தெரியவில்லை அவரை இளையராஜா தள்ளிவிட்டார்.

இந்த குளத்தில் கல் எறிந்தவர்கள்
ஒருமுறை இந்த குளத்தில் கல் எறிந்தவர்கள் என்ற தொடரில் இளையராஜா குறித்து எழுந்த முடிவெடுத்தார் வைரமுத்து. கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டு காற்று உன் குத்தகையிலே இருக்கிறது என ராஜா சார் குறித்து எழுதிக்கொண்டிருந்தார். அப்போது இளையராஜா இசையமைத்த 'உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி' என்ற பாடல் ஒலிக்கத்தொடங்கியது.
உடனே தான் எழுதிக்கொண்டிருந்த பேப்பரை தூக்கி எறிந்த வைரமுத்து இளையராஜாவை அழிக்கவே முடியாது. அவன் பெரிய ஆள்யா. எனக்கு எதிரின்னா இளையராஜாம் மட்டும்தான். அவருடன் வேலை பார்க்கும்போது ஏற்பட்ட திருப்தி அதன் பிறகு யாரிடமும் வரவில்லை என விரக்தியாகவும், சலித்தபடியும் கூறினார் என்னிடம்" என மாரிமுத்து தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











