Marimuthu: அஜித்தின் ஆசை வெளியான அதேநாளில் உயிரிழந்த மாரிமுத்து... SJ சூர்யா சொன்ன பிளாஷ்பேக்!
சென்னை: எதிர்நீச்சல் சீரியல் மூலம் பிரபலமான நடிகர் மாரிமுத்து மாரடைப்பு காரணமாக காலமானார். இயக்குநர், நடிகர் என பன்முகக் கலைஞராக வலம் வந்த மாரிமுத்துவின் மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அஜித்தின் ஆசை படத்தில் உதவி இயக்குநர்களாக பணிபுரிந்துள்ள எஸ்ஜே சூர்யாவும் மாரிமுத்துவும், அப்போது முதல் நெருங்கிய நண்பர்களாக பழகி வருகின்றனர். ஆசை திரைப்படம் வெளியாகி 28 ஆண்டுகள் நிறைவான அதேநாளில் மாரிமுத்து உயிரிழந்த நிலையில், எஸ்ஜே சூர்யாவின் பிளாஷ்பேக் ஒன்று வைரலாகி வருகிறது.

ஆசை வெளியான அதேநாளில் மாரிமுத்து மறைவு: இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்த மாரிமுத்து, அதன்பின்னர் ராஜ்கிரனிடம் அசிஸ்டெண்ட் டைரக்டராக வேலை பார்த்துள்ளார். அதனைத் தொடர்ந்து இயக்குநர்கள் வசந்த், எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பலரிடமும் உதவியாளராக இருந்துள்ள மாரிமுத்து, கண்ணும் கண்ணும், புலி வால் படங்களையும் இயக்கியுள்ளார்.
அதேபோல், மாரி செல்வராஜ்ஜின் பரியேறும் பெருமாள் திரைப்படம், மாரிமுத்துவுக்கு சினிமாவில் நல்ல அறிமுகம் கொடுத்தது. தொடர்ந்து விக்ரம், ஜெயிலர் உட்பட பல படங்களில் நடித்துள்ள அவருக்கு, எதிர்நீச்சல் சீரியல் பெரிய கம்பேக் கொடுத்தது. ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில், "ஏய் இந்தாம்மா" என்ற வசனம் பேசியே தமிழ் ரசிகர்களை வசீகரித்தார். இதனால், தொடர்ந்து அவருக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வந்தது.
இந்நிலையில், இன்று காலை எதிர்நீச்சல் சீரியலுக்காக டப்பிங் பேசிக்கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு மாரிமுத்து உயிரிழந்தார். இதனிடையே மாரிமுத்து - எஸ்ஜே சூர்யா இடையே நட்பு ஏற்பட காரணமாக இருந்த ஆசை திரைப்படம் வெளியான அதேநாளில், அவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அஜித்தின் ஆசை திரைப்படம் 1995ம் ஆண்டு வெளியானது. வசந்த் இயக்கிய இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யாவும் மாரிமுத்துவும் உதவி இயக்குநர்களாக வேலை பார்த்தனர்.
அப்போது முதல் எஸ்ஜே சூர்யா, மாரிமுத்து இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1995 செப்டம்பர் 8ம் தேதி ஆசை திரைப்படம் வெளியாகி, இன்று 28 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அதேநாளில் அப்படத்தில் உதவி இயக்குநராக வேலை பார்த்த மாரிமுத்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பில் மாரிமுத்து செய்த அட்ராசிட்டியை எஸ்ஜே சூர்யா சமீபத்தில் கூறியிருந்தார்.
அதாவது ஆசை படத்தில் அஜித்தும் சுவலட்சுமியும் நடித்த ஒரு காட்சியின் பின்னணியில் ஆங்கிலோ இந்தியன் பாட்டி ஒருவரை நிற்க வைத்திருந்தார்களாம். மீண்டும் ஒருமுறை அந்த காட்சியை எடுக்க வேண்டும் என மாரிமுத்துவிடம் இயக்குநர் வசந்த் கூறியுள்ளார். அதனால், அந்த பாட்டியை தேடி பிடித்து கூட்டி வரச் சொல்லியிருந்தாராம். ஆனால், மாரிமுத்து அந்த பாட்டி இறந்துவிட்டதாக பொய்சொல்லிவிட்டு வீட்டில் படுத்து தூங்கியுள்ளார். மாரிமுத்து சொன்னதை உண்மை என நம்பிய வசந்த் மறுநாள் படப்பிடிப்பில் பிஸியாக இருந்துள்ளார். அப்போது அந்த பாட்டி எதார்த்தமாக வந்து இயக்குநர் வசந்துக்கு வணக்கம் கூறியுள்ளது.
இதனைப் பார்த்து அதிர்ச்சியான மாரிமுத்து, வசந்திடம் போய் உண்மையை சொல்லிவிட்டாராம். இந்தச் சம்பவத்தை எப்போதுமே மறக்க முடியாது என எஸ்ஜே சூர்யா விழுந்து விழுந்து சிரித்தது வைரலாகியிருந்தது. ஆசை படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான இந்த சம்பவத்தை மாரிமுத்து ரசிகர்கள் இப்போது நினைவுகூர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











