'என் படத்தை சொந்த ஊரில் பார்க்க முடியவில்லையே'... -மேரி கோமுக்கு வந்த சோகம்!
தன் சொந்த வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து தயாரான படத்தை, தன் சொந்த ஊரில் பார்க்க முடியாத சோகம் வாய்த்துவிட்டது குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோமுக்கு.
ப்ரியங்கா சோப்ரா நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கும் படம் மேரி கோம்.

இது மணிப்பூரைச் சேர்ந்த இந்திய குத்துச் சண்டை வீராங்கனை எம்சி மேரி கோமின் சொந்த வாழ்க்கைக் கதையாகும்.
இந்தப் படம் இந்தியாவில் 1800 அரங்குகளில் வெளியானது. ஆனால் மேரி கோமின் சொந்த மாநிலத் தலைநகரான இம்பாலில் வெளியாகவில்லை.
இந்த மாநிலத்தில் இந்திப் படங்களே வெளியாகக் கூடாது என கடந்த 2000 முதல் கட்டுப்பாடு விதித்துள்ளது அம்மாநிலத்தில் தலையெடுத்துள்ள புரட்சி மக்கள் முன்னணி என்ற தீவிரவாத அமைப்பு. அப்போதிலிருந்தே எந்த இந்திப் படங்களும் மணிப்பூரில் வெளியாவதில்லை.
தலைநகர் இம்பாலில் 6 திரையரங்குகள் உள்ளன. அனைத்திலும் மணிப்பூரி மொழிப் படங்கள் மட்டுமே வெளியாகி வருகின்றன.
தீவிரவாதப் பிரச்சினை ஒரு பக்கம் என்றால், அம்மாநில திரையரங்குகளில் நல்ல தொழில்நுட்ப வசதி கிடையாது. டிவிடி ப்ளேயர் மூலம்தான் சினிமாவை திரையிட முடியும். நல்ல புரொஜெக்டர்கள் அல்லது க்யூப் முறையில் திரையிடும் தொழில் நுட்பம் அங்கு இன்னும் வரவில்லை. இந்திப் படங்கள் வெளியாகாததற்கு இதுவும் ஒரு காரணம்.
இதுகுறித்து மேரி கோம் கூறுகையில், "உலகம் முழுவதும் உள்ள மக்கள் என்னுடைய வாழ்க்கையை திரையில் பார்க்கிறார்கள். ஆனால் என் சொந்த மாநில மக்களால் அதைப் பார்க்க முடியவில்லை எனும் போது மிகுந்த வருத்தமாக உள்ளது. இங்கு அந்தப் படத்தை வெளியிடுவது சிரமம் என்பது எனக்கும் தெரியும். ஒரு வகையில் வராமல் போனது கூட நல்லதுதான். இருந்தாலும் நான் அரசுடன் பேசி எப்படியாவது படத்தை இங்கு வெளியிட வைக்க முயற்சிக்கிறேன்," என்றார்.
மணிப்பூரின் பிரபல சினிமா இயக்குநர் கூறுகையில், "ஒரு படத்தை ரிலீஸ் செய்ய முடியாத அளவுக்கு தடைகள் நிலவுவது வருந்தத்தக்கது," என்றார்.
ஆறு உலக சாம்பியன்ஷிப் குத்துச் சண்டைப் போட்டிகளில் வென்றுள்ள மேரி கோம், 2012 ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்காக வெண்கலம் வென்றவர்.


Click it and Unblock the Notifications











