சினிமாகாரங்க யாருமே கண்டுக்கல! மகள்களின் படிப்புக்கு உதவினாலே போதும் - ராசுமதுரவன் மனைவி கண்ணீர்!
சென்னை: தமிழ் சினிமா உலகில் தான் இருந்தவரை தனது படங்கள் மூலம் ஃபேமிலி ஆடியன்ஸை தன் வசம் வைத்திருந்த இயக்குநர்களில் ராசு மதுரவனும் ஒருவர். இவரது படங்களில் கட்டாயம் குடும்ப உறுப்பினர்களை ரசிகர்கள் நினைத்துப் பார்க்கும் அளவிற்கு மிகவும் எதார்த்தமான காட்சிகளை அமைத்து ரசிகர்களை அழவைத்து விடுவார். இப்படியான புகழுக்குச் சொந்தக்காரரான ராசு மதுரவன் தொண்டைப் புற்றுநோயால் கடந்த 2013ஆம் ஆண்டு மறைந்தார். இந்நிலையில் அவரது மனைவி தனது குடும்பத்தின் நிலை குறித்து பேசியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ராசு மதுரவன் இயக்கத்தில் வெளியான பூமகள் ஊர்வலம், பாண்டி, மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, பாண்டி ஒலிபெருக்கி நிலையம் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது. இதில் மாயாண்டி குடும்பத்தார் படம் இன்றைக்கும் பேசப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது.

இவர் மறைந்து 11 ஆண்டுகள் ஆன நிலையில் இவரது மனைவி பவானி தனது குடும்ப நிலை குறித்து பேசியுள்ளார். அதில், " எனது மூத்த மகள் 12ஆம் வகுப்பு படிக்கின்றார். இளைய மகள் 10ஆம் வகுப்பு படிக்கின்றார். அவர் இறந்த பின்னர் எங்கள் குடும்பம் கஷ்டங்களை எதிர்கொண்டு வருகின்றது. எனது மகள்கள் அவரது அப்பா குறித்து எதாவது செய்திகள் யாராவது எழுதி இருக்காங்களா என கூகுளில் தேடிக்கொண்டே இருப்பார்கள். அப்பாமீது அவ்வளவு பாசம் அவர்களுக்கு.

எளிமையாக பழகுவார்: அவர் இருந்தவரை நான் வேலைக்கே போனதில்லை. ஈகோ பார்க்காமல் அனைவரிடமும் பழகுவார். வீட்டிற்கு யாராவது வந்தால் கூட அவரே டீ போட்டு கொடுப்பார். எனது மாமியார் என்மீது பாசமாக இருந்தாலும் அவரது மகன் இறந்ததை நினைத்து இன்றைக்கும் வருத்தப்படுகின்றார். எங்க குடும்பத்தை நடத்துறதுக்குப் பொருளாதார ரீதியா உதவ எங்களுக்கு யாருமே இல்ல. இப்படியான நிலையில் குடும்பத்தை காப்பாற்ற, ஒரு தனியார் ஸ்கூலில் கிண்டர் கார்டன் டீச்சரா வேலைக்குப் போய்க்கொண்டு உள்ளேன். மாதம் ரூபாய் 12 ஆயிரம் சம்பளம் கிடைக்கின்றது. இந்த சம்பளத்தின் மூலம்தான் எங்கள் வீட்டின் சாப்பாட்டுச் செலவுகளை கவனித்து வருகின்றோம்.
யாருமே விசாரிக்கல: எனது மகள்களுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டுவதற்கு எல்லாம் கடன் வாங்கித்தான் கட்டிக்கொண்டு உள்ளோம். சினிமாத்துறையில் இருந்து இதுவரைக்கும் யாரும் எந்த உதவியுமே செய்யவில்லை. எனது கணவர் மருத்துவமனையில் இருந்தபோதுகூட மருத்துவச் செலவுக்குக்கூட யாருமே உதவி செய்யவில்லை. அவர் இறந்து 11 ஆண்டுகள் ஆகின்றது. அவரோட இயக்கத்துல நடித்தவர்கள்யாருமே எங்களைத் தொடர்புகொண்டு எப்படி இருக்கீங்கன்னு விசாரித்தது கூட இல்லை.

சீமான் போன் எடுக்கல: வீட்டில் விழா வைத்தபோது அழைப்பு விடுக்க சீமான் அண்ணனுக்கு போன் பண்ணினேன். ஆனால் அவர் எடுக்கல. அவரோட வாட்ஸ்அப் நம்பருக்கும் மெசேஜ் அனுப்பினேன். அதை, அவர் பார்த்தாரா இல்லையான்னு தெரியல. நேரடியாக அவரைப் பார்த்து பத்திரிக்கை கொடுக்கவும் முடியவில்லை. எனது கணவர் குறித்து பலரும் பல பேட்டிகளில் கூறுகின்றார்கள். ஆனால் அவர்கள் யாருமே எங்களது குடும்பத்தினை கண்டுகொள்வது இல்லை.
மகள்களின் படிப்பு: எனது கணவருக்கு எனது மகள்களை நன்றாக படிக்கவைக்க வேண்டும் என்பது மிகப்பெரிய ஆசை. எனது மகள்களின் கல்விக்காவது யாராவது உதவினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கண்ணீர் மல்க பேசியுள்ளார். இப்போது இது தொடர்பான செய்திகள் இணையத்தில் அதிகம் உலா வருகின்றது.


Click it and Unblock the Notifications











