மயில்சாமி குடியால சாகல.. தப்பு தப்பா பேசாதீங்க காரணமே வேறு.. இளவரசு பளிச்
சென்னை: தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல் நல்ல மனிதராகவும் மனிதாபிமானம் கொண்டவராகவும், கொடையாளியாகவும் அறியப்பட்ட நபர் நகைச்சுவை நடிகர் மயில்சாமி. இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு மொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியது.
பலரும் மயில்சாமி மரணம் குறித்தும் அவர் இருந்தபோது மக்களுக்கு எவ்வளவு நல்லது செய்தார் என்பது குறித்தும் பேசினார்கள். இப்படி இருக்கையில் நடிகர் இளவரசு மயில்சாமி மரணம் குறித்து தெரிவித்துள்ள தகவல் பலரது கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாமல் மயில்சாமி மரணம் தொடர்பாக பலரும் பலவிதமாக தெரிவித்து வந்த கருத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

எம்.ஜி.ஆர் விசுவாசி: நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர், அதிமுகவின் சார்பாக பல தொலைகாட்சிகளில் விவாதங்களில் கலந்து கொண்டுள்ளார். அந்த அளவுக்கு எம்.ஜி.ஆர் விசுவாசி. எம்.ஜி.ஆர் புகைப்படத்தை டாலராக கொண்டு ஒரு தங்கச் செயின் போட்டிருப்பார். தன்னிடத்தில் யார் உதவி கேட்டாலும், தன்னிடத்தில் இருக்கும் பணத்தை வைத்து செய்வது மட்டும் இல்லாமல், மற்றவர்களிடத்திலும் இரவல் கேட்டு உதவி செய்யும் அளவிற்கு மனப்பக்குவம் கொண்ட மனிதர். அவரது மறைவின் போது திரை உலகத்தை கடந்து பொதுமக்கள் பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
மரணத்திற்கு காரணம்: இந்நிலையில், இவரது மரணம் தொடர்பாக பலரும், இவர் மது அதிகம் அருந்தியதால் தான் சீக்கிரமே மரணம் அடைந்துவிட்டார் என்று பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால் இதனை நடிகர் இளவரசு மறுத்துள்ளார். இது தொடர்பாக இளவரசு கூறுகையில், " சினிமாகாரர்கள் நடுத்தர வயதில் இறந்து விட்டால் எதோ குடியால் இறந்து விடுகிறார்கள் என்று நினைத்துக் கொள்கிறார்கள். அது உண்மை இல்லை. மயில்சாமி இறந்த போது கூட பலரும் அப்படித்தான் கூறினார்கள். மயில்சாமி இறந்தது குடியால இல்லை, கட்டுப்பாடற்ற உணவு முறை. இறந்தவர்கள் குறித்து தவறா பேசுவாங்க, இல்லையினா நல்லதா பேசுவாங்க.

மனசு: ஆனால் மயில்சாமி குறித்து அவர் செய்த நல்லதை மட்டும் தான் சொல்ல முடியும். மும்பையில் இருந்து நடிகர் விவேக் ஓபராய் வந்து நாகப்பட்டினத்தில் உதவி செய்ததைக் கேள்விப்பட்டு, உடனே கிளம்பிச் சென்று அவரைப் பார்த்து, நீங்கள் மும்பையில் இருந்து வந்து உதவி செய்யறீங்க, நான் இது கூட செய்யலனா எப்படி என தான் அணிந்திருந்த எம்.ஜி.ஆர் முகம் போட்ட செயினை அவரிடத்தில் கொடுத்துவிட்டு வந்தார். இதுதான் மயில்சாமி" என்று தெரிவித்துள்ளார். நடிகர் இளவரசு இவ்வாறு தெரிவித்துள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications