தொடங்கியது மயில்சாமியின் இறுதி ஊர்வலம்.. அலை அலையாய் திரண்ட ரசிகர்கள்
சென்னை: நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் இறுதி ஊர்வலம் ஆரம்பித்தது. அதில் ரசிகர்கள், திரையுலகினர் என பலர் அலை அலையாய் திரண்டனர்.
நகைச்சுவை நடிகரும், பல குரல் கலைஞருமான மயில்சாமி சிவராத்திரியை முன்னிட்டு சனிக்கிழமை இரவு முழுக்க கண் விழித்தார். அதன் பிறகு வீட்டுக்கு சென்ற அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்
அவரது மறைவு ஒட்டுமொத்த திரையுலகத்தினரையும் அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது. பலரும் அவரது உயிரிழப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றனர். நேற்று மயில்சாமி உயிரிழந்ததை அடுத்து அவரது உடல் சாலிகிராமத்தில் இருக்கும் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு திரையுலகினரும், ரசிகர்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி செலுத்திய ரஜினி
மயில்சாமியின் இறப்பு செய்தி கேட்டு இன்று ரஜினிகாந்த் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார் அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நானும் மயில்சாமியும் நெருங்கிய நண்பர்கள். இருவருமே அடிக்கடி நேரில் சந்தித்துக்கொள்வோம். திருவண்ணாமலை போகும்போதெல்லாம் ஜோதியை பற்றி தொலைபேசியிலேயே அவர் என்னிடம் சொல்வார். கேளம்பாக்கத்தில் இருக்கும் கோயிலுக்கு நான் பாலாபிஷேகம் செய்ய வேண்டுமென்பது அவரது கடைசி ஆசை. அதனை நான் நிறைவேற்றுவேன்" என்றார்.

உதவி செய்த மயில்சாமி:
அதேபோல், மயில்சாமியின் உதவும் தன்மை குறித்தும் பலரும் பேசிவருகின்றனர். ஒருமுறை விவேக் ஓபராய் தமிழ்நாட்டில் செய்த உதவியை கேள்விப்பட்ட மயில்சாமி நேரில் அவரை சந்தித்து தான் அணிந்திருந்த எம்ஜிஆர் படம் போட்ட தங்க சங்கிலியை அவருக்கு அணிவித்துவிட்டுவந்தார் என மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் பேசியிருந்த வீடியோவும் இணையத்தில் ட்ரெண்டானது. மேலும் பலருக்கும் மயில்சாமி உதவி செய்தது தொடர்பான தகவல்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருக்கின்றன. இதனை கேள்விப்படும் ரசிகர்கள் மயில்சாமிக்காக வருந்திவருகின்றனர்.

மயில்சாமியின் இறுதி ஊர்வலம்
இந்நிலையில் மயில்சாமியின் இறுதி ஊர்வலம் இன்று நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அவரது வீட்டிலிருந்து மயில்சாமியின் உடலை தகனம் செய்வதற்காக இறுதி ஊர்வலம் தற்போது தொடங்கியிருக்கிறது. இந்த ஊர்வலத்தில் திரையுலகத்தை சேர்ந்தவர்கள் மற்றும் ரசிகர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். அவரது உடலானது வடபழனியில் இருக்கும் இடுகாட்டில் தகனம் செய்யப்படும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











