'சம்பாதிச்ச பணத்தை சினிமாவுக்குள்ளேயே போடும் காமெடி நடிகர்கள் கருணாஸும் கருப்பும்தான்!'
சென்னை: தமிழ் சினிமாவிலேயே, சம்பாதிச்ச பணத்தை மீண்டும் சினிமாவுக்குள்ளேயே போடும் காமெடி நடிகர்கள் இருவர் மட்டுமே. அவர்கள் கருணாஸும் கஞ்சா கருப்பும்தான் என்றார் நடிகர் மயில்சாமி.
நகைச்சுவை நடிகர் கருணாஸ் ரகளபுரம் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை அவரே தயாரித்துமுள்ளார்.

இதன் ட்ரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா வடபழனியில் உள்ள ஸ்டூடியோவில் நடந்தது. தயாரிப்பாளர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், கலைப்புலி தாணு, இயக்குநர் நாராயணசாமி, நடிகர்கள் மயில்சாமி, எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலரும் பங்கேற்றனர்.
விழாவில் மயில்சாமி பேசுகையில், "கருணாசையும், கஞ்சா கருப்பையும் நான் பாராட்டுகிறேன். சினிமாவில் சம்பாதிச்ச பணத்தை சினிமாவிலேயே முதலீடு செய்து படங்கள் தயாரிக்கிற இரண்டே இரண்டு காமெடி நடிகர்கள் இந்த ரெண்டு பேரும்தான். இந்த காமெடி நடிகர்களால் திரையுலகில் உள்ள நூறு குடும்பங்கள் சந்தோஷமாக வாழ்கிறது. மற்றவர்கள் செலவழிக்காமல் பதுக்குகின்றனர்.
ஒரு குட்டிக்கதை சொல்றேன். ஒருத்தன் கோடி கோடியா சம்பாதித்து தானம் தர்மம் செய்யாமல் குழி தோண்டி பணத்தை புதைத்து வைத்தான். அப்பப்பப அந்த பணத்தை பார்த்துவிட்டு மூடி விடுவான். இதை கவனித்த ஒருவன் அந்த பணத்தை திருடிக் கொண்டு போய்விட்டான். பணத்தை காணாமல் அவன் வாயில் வயிற்றில் அடித்து அழுதான். அந்த வழியாக வந்த ஒருவர் அவனிடம் கேட்டார். ஏண்டா இந்த பணத்தை நீ யாருக்காவது கொடுத்திருப்பியா? இல்லை இல்லை கொடுக்க மாட்டேன்னான் அவன்.

தானதர்மம் பண்ணுவியா-ன்னு கேட்டார். இல்ல மாட்டவே மாட்டேன் என்றான் அவன். இதை எடுத்து உனக்கு தேவையானதை வாங்க செலவாவது செய்வியா? ன்னார். அதையும் செய்யமாட்டேன்னான்.
கடைசியா சொன்னார். செலவே செய்யாம இந்த பணத்தை வச்சிக்கிறதுக்கு இந்த பணம் காணாம போச்சுன்னு ஏன் நினைக்கிற இங்கதான் இருக்குன்னு நினைச்சுக்க வேண்டியது தானே என்றார். அப்படி பணத்தை வெட்டியா புதைச்சு வைக்காமல் சினிமாவுல முதலீடு செய்து குடும்பங்களை வாழ வைக்கும் கருணாசையும், கஞ்சா கருப்பையும் வாழ்த்துகிறேன்," என்றார் பலத்த கைத்தட்டல்களுக்கிடையே.


Click it and Unblock the Notifications











