மயில்சாமியின் உருவப்படத்தை கோயில் கருவறையில் வைத்து வழிபாடு.. என்ன காரணம் தெரியுமா?
சென்னை: மறைந்த நடிகர் மயில்சாமியின் உருவப் படத்தை கோயில் கருவறையில் வைத்து வழிபாடு நடத்தி உள்ள சம்பவம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
மகா சிவராத்திரியன்று இரவு முழுவதும் டிரம்ஸ் சிவமணி உடன் கச்சேரியில் கலந்து கொண்டு பாட்டு பாடிய மயில்சாமி அதிகாலையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது ஒட்டுமொத்த திரையுலகையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில், அவர் கடைசியாக சென்ற சிவன் கோயிலில் மயில்சாமியின் உருவப்படத்தை வைத்து வழிபாடு செய்துள்ளனர்.

தங்கமான மனசு
கையில் 10 ஆயிரம் இருந்தாலும் பத்து பேருக்கு பிரித்துக் கொடுக்கும் கொடையுள்ளம் கொண்டவர் மயில்சாமி என அவரை பற்றி தெரிந்த அனைவருமே அவரது நல்ல உள்ளத்தை பாராட்டி வருகின்றனர். 57 வயதில் திடீரென உயிரிழந்தது திரையுலகத்திற்கே பேரிழப்பாக மாறி உள்ளது. கடைசி வரை சிவ பக்தராக இருந்த மயில்சாமி மகா சிவராத்திரி அன்றே சிவனடி சேர்ந்து விட்டார் என நடிகர் சார்லி, டிரம்ஸ் சிவமணி உள்ளிட்ட பல பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தனை கோடி சொத்து
பலருக்கும் உதவி செய்து வந்த மயில்சாமி தனது குடும்பத்தையும் கவனித்து வந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. சுமார் 18 கோடி வரை 40 ஆண்டுகள் சினிமாவில் சம்பாதித்த சொத்துக்களை தனது குடும்பத்தினருக்காக விட்டுச் சென்றிருக்கிறார் மயில்சாமி என தகவல்கள் வெளியாகி உள்ளன.

மரணத்திற்கான காரணம்
ஏற்கனவே 3 முறை இதய அறுவை சிகிச்சை செய்துள்ளார் மயில்சாமி என்றும் அதிக சத்தம் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு இருந்த நிலையிலும், சிவராத்திரி அன்று கச்சேரியில் கலந்து கொண்டது அவரது மரணத்திற்கான காரணமாக இருக்கலாம் என தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

கடைசியாக வழிபட்ட கோயில்
சென்னை கேளம்பாக்கம் அருகே மேலக் கோட்டையூரில் உள்ள மேகநாதீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் கடைசியாக கலந்து கொண்டார் நடிகர் மயில்சாமி. டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து சிவன் கோயிலில் இரவு முழுவதும் பஜனையில் கலந்து கொண்டு பாட்டுப் பாடிய வீடியோ காட்சிகள் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

கருவறையில் மயில்சாமி புகைப்படம்
மறைந்த நடிகர் மயில்சாமியின் திருவுருவ புகைப்படத்தை மேகநாதீஸ்வரர் கோயிலின் கருவறையில் வைத்து வழிபாடு நடத்தி உள்ளனர். பல ஆண்டுகளாக கேளம்பாக்கத்தில் உள்ள அந்த திருக்கோயிலுக்கு ஏகப்பட்ட நலத்திட்ட பணிகளை செய்ய நடிகர் மயில்சாமி தொண்டு செய்துள்ளார் என்றும் மயில்சாமியின் ஆன்மா சாந்தியடைவதற்காக இப்படி செய்துள்ளோம் என கோயில் அர்ச்சகர் டிவி சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











