விஜயகாந்த் எங்க படத்துல இருக்காரு! அன்பு செலுத்த யாரிடமும் அனுமதி கேட்கனும்னு இல்லை - விஜய் மில்டன்
சென்னை: இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் படம் மழை பிடிக்காத மனிதன். ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கியுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் டைட்டில் வெளியானபோதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது. படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால், படம் குறித்து இயக்குநர் விஜய் மில்டன் பல சுவாரஸ்யமான தகவல்களை நமது ஃபிலிமி பீட் யூட்யூப் சேனலுக்கு பகிர்ந்துள்ளார்.
இந்தப்படத்தில் நாங்கள் கேப்டன் விஜயகாந்த்தை நடிக்க வைக்க முடிவு செய்திருந்தோம். இது தொடர்பாக அவரது மனைவி பிரேமலதா அவர்களிடம் உரிய அனுமதி பெற்று அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்றது. இறுதியாக அவரது அறையிலேயே ஐபோன் வைத்து எடுத்துக் கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. அதன் பின்னர் இன்றைய தொழில்நுட்பத்தை வைத்து அந்த காட்சியை டெவலப் செய்து கொள்ளலாம் எனவும் திட்டமிட்டிருந்தோம். ஆனால் அதற்குள் கேப்டன் மறைந்து விட்டார்.

இதனால்தான் அவரது கதாபாத்திரத்தில் சத்யராஜ் சார் நடித்துள்ளார். ஆனாலும் எனக்கு கேப்டன் விஜயகாந்த் மீது அன்பு இருப்பதால் இந்த படத்தில் அவர் இருக்கும் படியாக ஒரு காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. கேப்டன் விஜயகாந்த் ஒரு நடிகர் மட்டும் இல்லை. அவர் ஒரு தலைவர். அவரை ஒரு வியாபார நோக்கத்திற்காக பயன்படுத்துவது தவறு. எங்கள் படத்தில் முதலில் கேப்டன் நடிப்பதாக இருந்தது. ஆனால் அது நடக்காத காரணத்தால் அவருக்கு பதிலாக சத்யராஜ் சார் நடிக்கின்றார்.

அனுமதி அவசியமில்லை: ஆனால், எனக்கு கேப்டன் விஜயகாந்த்தை மிகவும் பிடிக்கும். அவர் மீதான அன்பை இந்த படத்தில் வெளிப்படுத்தியுள்ளேன். ஒருவர் மீது அன்பு வைக்க யாரிடமும் அனுமதி வாங்கவேண்டிய அவசியம் இல்லை. இந்த படத்தில் கேப்டன் விஜயகாந்த் மட்டும் இல்லாமல் எனக்கு பிடித்த நடிகை சௌந்தர்யா இடம் பெறுவதைப் போல் காட்சி வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல்தான் நடிகை பாவனா. எனது நண்பர். எனக்கு மிகவும் பிடிக்கும், தீபாவளி படத்திற்காக பணியாற்றும்போது என்னிடம் நன்றாக பழகினார். பாவனா இந்த படத்தில் வருவதைப் போலவும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனி: நானும் விஜய் ஆண்டனியும் 20 ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கின்றோம். விஜய் ஆண்டனிக்குள் இருக்கும் அமைதி எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய அந்த அமைதிதான் எனக்கு இந்த படத்தில் தேவைப்பட்டது. அவருக்காகவே உருவாக்கப்பட்ட கதைதான் இது. அதனால்தான் அவரை நடிக்க வைத்தேன். இந்த படம் மக்களுக்கு பிடிக்கும் என நம்புகின்றேன்.

ஓடிடி: வரும் காலங்களில் தியேட்டரை நம்பி படம் செய்யவேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக ஓடிடிக்களுக்கான படங்களை தயாரிக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கவேண்டும். அப்படியான தயாரிப்பாளர்கள் படம் எடுத்தால் தியேட்டர் வசூல் குறித்து கவலைப் படத் தேவையில்லை. எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் ஒரு வாரம்தான். அப்படி இருக்கையில் தியேட்டரை நம்பிக்கொண்டு இருக்கவேண்டிய அவசியம் இல்லை என பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











