சின்மயி சொல்வதெல்லாம் பொய்: ராதாரவி
சென்னை: நடிகர் அர்ஜுனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் ராதாரவி.
மீ டூ இயக்கம் பாலிவுட் மட்டும் அல்ல கோலிவுட்டிலும் வேகம் எடுக்கத் துவங்கியுள்ளது. அர்ஜுன் மீது நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நடிகர் ராதாரவி அர்ஜுனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,

மீ டூ
இன பிரச்சனை குறித்து பேச அமெரிக்காவில் துவங்கப்பட்டது மீ டூ இயக்கம். இந்தியாவில் அதை தவறாக எடுத்துக் கொண்டோம். எதிர்காலத்தில் இந்த மீ டூ இயக்கம் மிரட்டல் ஆயுதமாகிவடும் என்று நினைக்கிறேன். மீ டூ தருணங்கள் பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் ஏற்படுகிறது என்பதை பலர் புரிந்து கொள்வது இல்லை. தற்போது பெண்கள் மட்டுமே வெளியே சொல்கிறார்கள். அதனால் ஆண்களா, பெண்களா யார் சரி என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். தங்களின் பெயர்களை வெளியிடாமல் ஆண்களின் பெயர்களை மட்டும் வெளியிடுகிறார்கள்.

அர்ஜுன்
கேமராவுக்கு முன்பு நடிப்பு பற்றி நாங்கள் பேசுவது இல்லை என்று சிலர் தெரிவித்துள்ளனர். இது தானே அர்ஜுன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு. நடிச்சிக்கிட்டு இருக்கும்போது அவர் வேணும்னே என்ன உரசுகிறார் சார் என்று அந்த பெண் அர்ஜுன் பற்றி தெரிவித்துள்ளார். அதற்கு எல்லாம் சம்மதம் தெரிவித்து தானே ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறீர்கள். திரையில் கலைஞர்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக இருக்க வேண்டும் என்பார்கள். பயம் இருந்தால் கெமிஸ்ட்ரி எப்படி இருக்கும். கருமம், இந்த கெமிஸ்ட்ரி வரும்போதே தொல்லையா இருக்கும்னு நான் நினைச்சேன். முன்னாடி எல்லாம் நல்லா இருந்தது. இந்த கெமிஸ்ட்ரி ஒத்துப்போச்சுன்னு எப்ப சொன்னதோ அப்போ குழப்பம் வந்தது.

புகார்
ஒரு குழந்தை தவறு செய்தால் அதை உடனே திருத்த வேண்டும். அதே போன்று ஏதாவது தவறாக நடந்தால் உடனே அது குறித்து புகார் தெரிவிக்க வேண்டும். 15 ஆண்டுகளுக்கு முன்பு அவர் தவறாக நடந்து கொண்டார் என்று தற்போது சொல்வதில் பலனில்லை. டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியனில் உறுப்பினராக சேர ஆட்களை நான் என் வீட்டிற்கு வரச் சொன்னதாக செய்தி வெளியாகியுள்ளது. வீட்டுக்கு வாங்கன்னு நான் சொன்னேன்னா இது தான் ஒரே அர்த்தமா?. உறுப்பினராக பணம் இல்லாமல் அடுத்தவர்கள் முன்பு கெஞ்சுகிறார்கள். அதை தவிர்க்க அவர்களுடன் பேச வீட்டிற்கு அழைப்பேன்.

பொய்
அடுத்தவர்களை மிரட்டுவதற்கு மீ டு பயன்படுத்தப்படுகிறது. இப்படியே போனால், நாளை போலீஸ் அதிகாரி குற்றவாளியை நடுரோட்டில் வைத்து தான் கேள்வி கேட்க வேண்டும். லிமிட்டை தாண்டுவதால் தான் நான் மீ டூ இயக்கத்தை ஆதரிக்கவில்லை. இந்த இயக்கம் உண்மையாக இருந்தால் நான் நிச்சயம் ஆதரிப்பேன். நானும் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்தவன் தான். சின்மயி சொன்னது எல்லாமே சுத்தப் பொய். தற்போது அவர் ஏன் டப்பிங் யூனியன் பற்றி பேசுகிறார்?. அவர் உறுப்பினர் கூட கிடையாது. அவர் யார் பேச்சையோ கேட்டு தான் என் மீது குற்றம் சுமத்துகிறார் என்கிறார் ராதா ரவி.


Click it and Unblock the Notifications











