ஓடவோ, ஒளியவோ முடியவில்லை: பாலியல் புகார் தெரிவிக்கும் பெண்களை துரத்தும் 2 கேள்விகள்
சென்னை: பாலியல் புகார் தெரிவிக்கும் பெண்களிடம் இரண்டே இரண்டு கேள்விகள் தான் மீண்டும் மீண்டும் கேட்கப்படுகிறது.
பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது தனுஸ்ரீ தத்தா புகார் தெரிவித்தபோது பலரும் அவரை விளாசினார்கள். ஆனால் அவர் தைரியத்தை பார்த்து தான் பல நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக பேசத் துவங்கியுள்ளனர்.
நடிகைகள், பாடகிகள், இயக்குனர்கள், பத்திரிகையாளர்கள் என்று பல தரப்பட்ட பெண்கள் துணிச்சலாக பேசுகிறார்கள்.

பிரபலம்
யாராவது ஒரு நடிகையோ, பெண் இயக்குனரோ பிரபலமானவர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்தால் உடனே அவர்களிடம் இரண்டு கேள்விகளை கேட்கிறார்கள். அவர்களின் பக்க நியாயத்தை கேட்க யாரும் தயாராக இல்லை. புகார் என்ற வார்த்தையை கேட்டதும் சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் என்று அந்த பெண்கள் மீது முத்திரை குத்திவிடுகிறார்கள்.

ஆதாரம்
பாலியல் தொல்லை சம்பவம் நடந்து இத்தனை ஆண்டுகளாக ஏன் அமைதியாக இருந்தீர்கள்?. அந்த சம்பவம் நடந்ததற்கான ஆதாரம் உள்ளதா என்ற இரண்டு கேள்விகள் தான் அடிக்கடி கேட்கப்படுகிறது. பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்களால் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூட தைரியமாக கலந்து கொள்ள முடியாத அவல நிலை உள்ளது.

கெரியர்
பாலியல் தொல்லை கொடுப்பவர் பெரிய ஆளாக இருக்கும்போது அது குறித்து வெளியே சொன்னால் நம்பாமல் தன்னை ஒதுக்கி வைத்துவிடுவார்களோ என்ற பயம். ஒரு பெண் பாலியல் தொல்லைக்கு ஆளாகும்போது அவருக்கு பயம் ஏற்படுமா இல்லை அந்த நேரத்தில் ஆதாரத்தை திரட்டத் தோன்றுமா?

எதிரிகள்
மீ டூ இயக்கத்தை ஆதரிப்பதாக வாய் கிழிய பேசும் சில பெண் பிரபலங்கள் கூட தங்கள் வீட்டில் உள்ளவர்கள் மீது பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டால் அந்த பெண்ணுக்கு அசிங்கமான பட்டம் கட்டுவதுடன் ஆதாரம் கேட்கிறார்கள். பெண்களுக்கு பெண்களே எதிரியாக உள்ளனர். இப்படி இருக்கும் போது பாதிக்கப்பட்ட பெண்கள் என்ன செய்வார்கள்.

புகார்
யாராவது பாலியல் தொல்லை கொடுத்தால் உடனே புகார் தெரிவிப்பது நல்லது. பல ஆண்டுகள் கழித்து புகார் தெரிவிப்பதால் அந்த நபரின் பெயர் மட்டுமே கெடுமே தவிர அவருக்கு தண்டனை கிடைக்கும் வாய்ப்பு மிக மிகக் குறைவு. சம்பவம் நடந்த உடனே புகார் தெரிவித்தால் அந்த நபர் பிற பெண்களிடம் சில்மிஷம் செய்ய அஞ்சுவார். தற்போது புகார் தெரிவித்துள்ள பெண்கள் பல ஆண்டுகளாக அமைதியாக இருந்த நேரத்தில் அந்த நபர்கள் எத்தனை பெண்களின் வாழ்க்கையோடு விளையாடினார்களோ?


Click it and Unblock the Notifications











