கையில் கணவரின் அஸ்தி.. நிலைகுலைந்து போன மீனா.. மீளா துயரத்தில் !
சென்னை : நடிகை மீனா கணவரின் அஸ்தியுடன் கதறி அழுதபடி வீடு திரும்பி உள்ளார்.
Recommended Video
கொரோனா என்ற கொடூர அரக்கன் இன்னும் எத்தனை உயிரை காவுவாங்க போகிறதோ தெரியவில்லை. 2020ல் அனைவரையும் வீட்டிற்குள் முடக்கிப்போட்ட கொரோனா அடுத்தடுத்த மரணச் செய்திகளால் மனதளவிலும் அனைவரையும் சோர்வடையச் செய்தது.
அதுவும் குறிப்பாக கொரோனாவின் இரண்டாவது அலையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எழுத்தாளர் தாமிரா, பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு,பாடகர் ஏ.எல்.ராகவன் என ஏராளமானோர் உயிரிழந்தனர். கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்துவிட்டதால் அனைவரும் பெருமூச்சு விட்ட நிலையில் நடிகை மீனாவின் கணவர் உயிரிழந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நுரையீரல் பாதிப்பு
நடிகை மீனாவின் கணவரும் தொழிலதிபருமான வித்யாசாகருக்கு கடந்த ஜனவரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதையடுத்து நுரையீரலில் அவருக்குப் பாதிப்பு ஏற்பட்டு உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்காகக் காத்திருந்ததாகவும் உரிய நேரத்தில் உறுப்பு கிடைக்காததால் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

புறா எச்சம் காரணமா?
வித்யாசாகருக்கு ஏற்பட்ட நுரையீரல் பாதிப்புக்குப் புறா எச்சத்திலிருந்து பரவிய ஒரு வகைக் கிருமியைச் சுவாசித்ததே காரணம் எனக் கூறப்பட்டு வருகிறது. பொதுவாகவே கோழிகள் உள்ளிட்ட பறவைகளின் எச்சத்தில் வளரும் பூஞ்சை சுத்தம் செய்யும்போது காற்றில் அதன் துகள்கள் பரவி, உடலில் ஒவ்வாமை, தலைவலி, காய்ச்சல், நிமோனியா உள்ளிட்டவற்றை மனிதர்களுக்கு ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. இதுதான் மீனாவின் கணவர் உயிரிழப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.

ரஜினி நேரில் ஆறுதல்
நடிகை மீனா கணவர் வித்யாசாகரின் மரணத்திற்கு பல திரைப்பிரபலங்கள் நேரில் வந்து மீனா மற்றும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். நடிகை மீனா வீட்டிற்கு நடிகை ரம்பா முதல் ஆளாய் வந்தார். அவரை தொடர்ந்து நடன இயக்குநர் கலா மாஸ்டர், குணசித்திர நடிகை லட்சுமி உள்ளிட்ட பலரும் நேரில் வந்து துக்கம் விசாரித்தனர். மீனாவின் கணவர் உயிரிழந்த செய்தியை கேள்விபட்ட ரஜினிகாந்த் மீனாவை தொலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறிவிட்டு,காலையில் நேரில் வந்து ஆறுதல் கூறினார்.

அஸ்தியுடன்
வித்யாசாகரின் உடல் கோட்டூர்புரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் பெசன்ட் நகர் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. மீனாவின் வீட்டில் ஆண்கள் யாரும் இல்லாததால், மீனா மற்றும் அவரது மகள் நைனிகாவுடன் சேர்ந்து இறுதிச்சடங்குகளை செய்தனர். அவர்களின் குடும்ப முறைப்படி வித்யாசாகரின் உடல் தகனம் செய்யப்பட்டு அஸ்தியை கையில் எடுத்துக்கொண்டு வந்தார். இளம் வயதில் கணவர் இல்லாமல் நிலைகுலைந்து போயிருந்தார் மீனா. அவருக்கு பலரும் ஆறுதல் கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











