நடிகை மீரா மிதுன் கைது.. பிடிவாரண்ட் உத்தரவை அடுத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
சென்னை: நடிகை மீரா மிதுனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் நடிகை மீரா மிதுன் அலட்சியப்படுத்தி வருகிறார் என்றும் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் புகார்கள் எழுந்த நிலையில், பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பிக் பாஸ் பிரபலம், சோஷியல் மீடியா பிரபலமாக இருந்த மீரா மிதுன் பட்டியல் இனத்தவர் பற்றி அவதூறு கருத்துக்களை தெரிவித்த வழக்கில் ஒத்துழைப்பு கொடுக்காத நிலையில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

சர்ச்சை பேச்சு
பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரில், நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன், மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் சாம் அபிஷேக் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

தலைமறைவாக
கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுனை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பின்னர், நடந்த விவகாரம் குறித்து பகிரங்க மன்னிப்பு கோரிய மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

அலட்சியம்
இந்த வழக்கில் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு, முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மீரா மிதுன் ஆஜராகவில்லை. போலீசார் தரப்பு விசாரணைக்கு மீரா மிதுன் ஒத்துழைப்பு தருவதே இல்லை என தெரிவித்தனர்.

கோர்ட் உத்தரவு
இதையடுத்து, அவருக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அவரை கைது செய்து ஏப்ரல் 4ம் தேதி ஆஜர்படுத்த மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். எந்தவொரு முன் யோசனையும் இல்லாமல் கருத்து தெரிவித்து விட்டு விசாரணைக்கும் முறையாக ஆஜர் ஆகாமல் அலைக்கழித்த காரணத்திற்காக மீரா மிதுன் மீண்டும் கைது செய்யப்பட வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

மீரா மிதுன் கைது
இந்நிலையில், தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடிகை மீரா மிதுனை சென்னையில் கைது செய்துள்ளனர். வரும் ஏப்ரல் 4ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டு பின்னர் நீதிமன்றத்தின் முன் அவரை ஆஜர் படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











