கிங் காங் மகள் திருமணம்.. வடிவேலு ஒரு லட்சம் கொடுத்தாரா?.. விஜயகாந்த் இருந்திருந்தால்.. பிரபலம் ஓபன்
சென்னை: கிங் காங் மகள் கீர்த்தனாவின் திருமணம் சமீபத்தில்தான் சென்னையில் நடந்து முடிந்தது. திருமண ரிசப்ஷனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் வந்திருந்தார்கள். தேடி தேடி சென்று திரைத்துறையினருக்கு பத்திரிகை வைத்தார் கிங் காங். பெரும்பாலான நடிகர்கள், நடிகைகள் வராவிட்டாலும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை கிங் காங். மேலும் தனது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் சமீபத்தில் விருந்து வைத்தும் கலக்கினார்.
மாற்று திறனாளியான கிங் காங்கிற்கு சிறு வயதிலிருந்தே நடிப்பதற்கு ஆர்வம் வந்தது. இதன் காரணமாக திரைத்துறையில் முயற்சித்து நடிகராக மாறிவிட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்த கிங் காங்கிற்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அவரது குறைவான உயரமே அவருக்கு ப்ளஸ்ஸாக அமைந்துவிட்டது. மேலும் அவரது நடிப்பும் ரசிக்கும்படிதான் இருக்கும்.
மகளுக்கு நடந்த திருமணம்: கிங் காங்கிற்கு கீர்த்தனா என்ற மகள் இருக்கிறார். அவரும் நவீன் என்பவரும் காதலித்தார்கள். இந்தக் காதலுக்கு ஒத்துக்கொண்டு; கிங் காங்கும் சந்தோஷத்தோடு திருமணத்துக்கு க்ரீன் சிக்னல் காண்பித்தார். அதுமட்டுமின்றி மகளின் திருமணத்தை பிரமாண்டமாக நடத்துவதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கினார். இதனால் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட அனைத்து நடிகர்களுக்குமே திருமண அழைப்பிதழை கொடுத்தார்.

சூப்பர் திருமணம்: கோலிவுட் மட்டுமின்றி கன்னடத்திலும் சிவராஜ்குமாருடன் கிங் காங் நடித்திருக்கிறார். எனவே சிவராஜ்குமாருக்கும் நேரில் சென்று பத்திரிகை வைத்தார். சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருக்கும் பெசன்ட் நகர் முருகன் கோயிலில் கீர்த்தனா - நவீன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் தனியார் ஹோட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
வடிவேலு வைத்த ஒரு லட்சம் ரூபாய்: அந்த ரிசப்ஷனில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். மேலும் சில பிரபலங்களும் கலந்துகொண்டார்கள். வடிவேலுவை பொறுத்தவரை தனது மேனேஜரை அனுப்பி ஒரு லட்சம் ரூபாய் அன்பளிப்பாக கொடுத்தார். மேலும் கிங் காங்கை திருமணம் முடிந்த சில நாட்கள் கழித்து தொடர்புகொண்டு, "உங்கள் மகளின் திருமணத்துக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வந்ததே தமிழ்நாட்டிலிருந்து எட்டரை கோடி பேரும் வந்தது போன்றது. அத்தனை பேரும் வந்தாலும் உங்கள் வீடு தாங்குமா?..நீங்கள் பத்திரிகை வைத்தவர்கள் வரவில்லை என்று பலர் உசுப்பேத்துவார்கள். அதை நினைத்தெல்லாம் கவலைப்படாதீர்கள். அதான் முதலமைச்சரே வந்துவிட்டாரே" என பேசியதும் குறிப்பிடத்தக்கது.
மீசை ராஜேந்திரன் பேட்டி: இந்நிலையில் திருமணத்தை முடித்து சில நாட்கள் கழித்து தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு விருந்து வைத்தார் கிங் காங். அப்போது தனியார் ஊடகத்திடம் பேசிய மீசை ராஜேந்திரன், "வடிவேலுவுக்கு எப்போதுமே கிங் காங்கை பிடிக்கும். அவர் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தாரா இல்லை இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்தாரா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் ஒன்று, விஜயகாந்த் மட்டும் இருந்திருந்தால் இந்தத் திருமணத்தின் செலவு அனைத்தையுமே அவரே ஏற்றிருந்திருபபர்" என்றார்.


Click it and Unblock the Notifications











