தம்பியை அடுத்து அண்ணன்.. முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்திய மெகா ஸ்டார் சிரஞ்சீவி!
சென்னை: முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்தி உள்ளார் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி.
முன்னதாக அவரது தம்பியும் நடிகருமான பவன் கல்யாண் ட்விட்டரில் முதல்வர் மு.க. ஸ்டாலினின் ஆட்சி செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாக பாராட்டி இருந்தார்.
இந்நிலையில், அண்ணன் சிரஞ்சீவி நேரிலேயே சந்தித்து வாழ்த்தி இருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

முதல்வரை சந்தித்த மெகா ஸ்டார்
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை நடிகரும் முன்னாள் எம்.பியுமான மெகா ஸ்டார் சிரஞ்சீவி சந்தித்து வாழ்த்தியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினுடன் சிரஞ்சீவி நடத்திய சந்திப்பு புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சந்திப்பின் போது உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார்.

பவன் கல்யாண் வாழ்த்து
முன்னதாக நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டுக்களை தெரிவித்து போட்ட ட்வீட் வைரலானது. தமிழ்நாட்டு முதல்வராக பதவியேற்றுள்ள ஸ்டாலினின் ஆக்கப்பூர்வமான அரசியலை அவர் பாராட்டி இருந்தார்.

செயல் வீரர்
"அன்புக்குரிய தமிழக முதல்வர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்" எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் அரசியல் செய்ய வேண்டும். ஆனால் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் செய்யக் கூடாது. அதை வார்த்தைகளால் அல்ல, செயல்களால் நீங்கள் செய்து வருகிறீர்கள். உங்களது ஆட்சி நிர்வாகம், உங்கள் அரசின் செயல்பாடுகள், உங்கள் மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் ஊக்கமளிக்கும் விதத்தில் உள்ளது. உங்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் என பவன் கல்யாண் பாராட்டியுள்ளார்.

அண்ணனும் தம்பியும்
இப்படி ஒரே அடியாக அண்ணனும் தம்பியும் திடீரென தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை பாராட்டித் தள்ளுவதற்கும் நேரில் சந்தித்து பேசுவதற்கு பின்னணியில் என்ன அரசியல் இருக்கிறது என பலரும் சிந்தித்து விவாதங்களை நடத்தி வருகின்றனர். சிரஞ்சீவி மற்றும் பவன் கல்யாண் இருவரும் சினிமாவிலும் பிசியாக நடித்து வருவதால் வேறு விதமான கோரிக்கை ஏதும் உள்ளதா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











