Chiranjeevi Networth: டோலிவுட்டில் தனி ராஜாங்கமே நடத்தும் சிரஞ்சீவி.. சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் என கொண்டாடப்படும் நடிகர் சிரஞ்சீவியின் 68வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. கோனிடேலா என மிகப்பெரிய சினிமா குடும்பம் தான் தெலுங்கு சினிமாவையே ஒட்டுமொத்தமாக கட்டுக்குள் வைத்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.
சிரஞ்சீவியின் சகோதரர் பவன் கல்யாண், சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் உறவினர் அல்லு அர்ஜுன் என பலரும் டோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களாக வலம் வருகின்றனர்.

68 வயதிலும் மகனுக்கு போட்டியாக ஹீரோவாக அசத்தி வரும் சிரஞ்சீவி நடிப்பில் இந்த ஆண்டு 2 படங்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு, சம்பளம் மற்றும் சொகுசு வாழ்க்கை குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம் வாங்க..
1650 கோடி சொத்து: 1955ம் ஆண்டு ஆகஸ்ட் 22 ம் தேதி பிறந்த நடிகர் சிரஞ்சீவியின் பிறந்தநாளை அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் என பலரும் கொண்டாடி வருகின்றனர். 1978ம் ஆண்டு பிரணம்காரிடு படத்தின் மூலம் தெலுங்கில் நடிகராக அறிமுகமான சிரஞ்சீவி தமிழில் 47 நாட்கள், ராணுவ வீரன், எங்கள் சுவாமி ஐயப்பன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள அவரது ஒட்டுமொத்த சொத்து மதிப்பு மட்டும் 1650 கோடி என கணக்கிடப்பட்டு தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்க டாலர் மதிப்பில் சுமார் 200 மில்லியன் டாலருக்கு அதிபதி சிரஞ்சீவி.

சம்பளம்: இந்த ஆண்டு சிரஞ்சீவி நடிப்பில் வெளியான வால்டர் வீரய்யா படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. சமீபத்தில் வெளியான வேதாளம் படத்தின் ரீமேக்கான போலா சங்கர் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. ஒரு படத்துக்கு சுமார் 45 முதல் 50 கோடி ரூபாயை சம்பளமாக சிரஞ்சீவி வாங்கி வருவதாக கூறுகின்றனர்.
வீடுகள்: ஹைதராபாத்தின் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் பிரம்மாண்டமாக 28 கோடி ரூபாயில் சிரஞ்சீவியின் வீடு உள்ளது. மேலும், சமீபத்தில், பெங்களூருவிலும் ஒரு பிரம்மாண்ட வீட்டினை சிரஞ்சீவி வாங்கி உள்ளார். இதுபோக, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் சிரஞ்சீவிக்கு சொத்துக்கள் இருப்பதாக கூறுகின்றனர்.

கார்கள்: அப்பா சிரஞ்சீவிக்கு மகன் பரிசாக வழங்கிய 3 கோடி ரூபாய் மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் கார்கள் சிரஞ்சீவியிடம் உள்ளன. பிரஜா ராஜ்ஜியம் கட்சியை 2008ல் சிரஞ்சீவி ஆரம்பித்தாலும், அவரது தம்பி பவன் கல்யாண் அளவுக்கு இவரது அரசியல் பயணம் சிறப்பானதாக அமையவில்லை. ஆனாலும், சமூக நீதி தான் எனது கொள்கை என இவர் குறிக்கோளுடன் வாழ்ந்து வருவது மற்றும் தொண்டு நிறுவனத்தை நடத்தி பலருக்கும் உதவி வருவது என ஏகப்பட்ட நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார் சிரஞ்சீவி.


Click it and Unblock the Notifications











