பாக்யராஜ் சார், நீங்க என்ன செஞ்சீங்க? -வாட்ஸ்ஆப்பில் கேள்வி எழுப்பிய உறுப்பினர்!
சென்னை : தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல் வரும் 27ம் தேதி நடைப்பெறவுள்ளது.
இதில் ஆர்கே செல்வமணி மற்றும் கே பாக்யராஜ் தலைமையிலான இரு அணிகள் போட்டியிடுகின்றன.
தேர்தலையொட்டி நடைபெற்ற அறிமுக கூட்டத்தில் இரு அணிகளும் ஒருவரையொருவர் தாக்கி பேசிக் கொண்டனர்.

இயக்குநர்கள் சங்க தேர்தல்
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் ஆர்கே செல்வமணி மற்றும் கே பாக்யராஜ் தலைமையில் இரு அணிகள் போட்டியிடுகின்றன. இதையொட்டி நடைபெற்ற அறிமுக கூட்டங்களில் ஒருவரையொருவர் இரு தரப்பிலிருந்தும் குற்றம் சாட்டிக் கொண்டனர்.

வசைபாடிய இரு அணியினர்
செல்வமணியின் வெற்றிப் படங்கள் அவரால் இயக்கப்பட்டதா என்ற சந்தேகம் தனக்கு உள்ளதாக கே பாக்யராஜ் கூற, பதிலுக்கு பதவிக்காக பொய்யான வாக்குறுதிகளை கூறி தனது மரியாதையை பாக்யராஜ் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று ஆர்கே செல்வமணியும் மாற்றி மாற்றி வசைப்பாடிக் கொண்டனர்.

உறுப்பினர்கள் கேள்வி
இதனிடையே இருதரப்பிலும் உள்ள சங்க உறுப்பினர்களும் தங்களது பங்கிற்கு வாட்ஸ்ஆப்பில் மாற்றி மாற்றி கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆர்கே செல்வமணியின் புதுவசந்தம் அணியை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் வாட்ஸ்அப் மூலம் கே பாக்யராஜிடம் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்

எழுத்தாளர் சங்கத்துக்கு செய்தது என்ன?
எழுத்தாளர் சங்க தலைவராக கே பாக்யராஜ் உள்ள நிலையில், அவர் பதவிக்கு வந்தபிறகு சங்கத்திற்காக இரண்டு நல்ல விஷயங்களை செய்ததாக அந்த உறுப்பினர் தெரிவித்துள்ளார். தீபாவளிக்கு சங்க உறுப்பினர்களுக்கு இனிப்பு மற்றும் ரூ. 1000 வழங்கியதாகவும் கொரோனா காலத்தில் உறுப்பினர்களுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

செல்வமணியால் உதவி
சன் டிவியில் பட்டிமன்றம் நடத்தியதன்மூலம் வந்த 15 லட்சம் ரூபாயில் இந்த உதவிகள் செய்யப்பட்டதாகவும் இதை ஏற்பாடு செய்தது செல்வமணி தான் என்றும் அவர் கூறியுள்ளார். இது எழுத்தாளர் சங்கத்திற்கு மட்டுமின்றி பாக்யராஜுக்கும் நன்றாக தெரியும் என்றும் அந்த உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

பெப்சி மூலம் செல்வமணி உதவி
இதேபோல கொரோனா காலத்தில் வழங்கப்பட்ட உதவி பெப்சியில் இருந்து வந்த உதவிதான் என்றும் அதற்கு பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணிதான் காரணமாக இருந்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். கே பாக்யராஜ் தலைவராக உள்ள எழுத்தாளர் சங்கத்தில் நடைபெற்ற இந்த இரண்டு உதவிகளுக்கு மூலக்காரணம் செல்வமணிதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறங்கி வேலை செய்வதே பொறுப்பு
கே பாக்யராஜ் தலைவராக உள்ள எழுத்தாளர் சங்கத்தில் அவரது முயற்சியில் என்ன உதவி நடைபெற்றது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். பதவியில் அமர்வது பொறுப்பு அல்ல என்றும் இறங்கி வேலை செய்வதுதான் பொறுப்பு என்றும் அந்தவகையில் செல்வமணியை அடித்துக் கொள்ள ஆளில்லை என்றும் அசோக் அண்ணாமலை என்ற அந்த உறுப்பினர் மேலும் தனது வாட்ஸ்அப்பில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











