மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் படம்.. சம்பள பாக்கி கேட்டு வழக்குத் தொடர ‘மேஜிக் மேன்’ முடிவு!
சம்பள பாக்கி கேட்டு மெர்சல் படத் தயாரிப்பாளர் மீது வழக்குத் தொடர மேஜிக் மேன் ராமன் ஷர்மா முடிவு செய்துள்ளார்.
Recommended Video
சென்னை: மெர்சல் திரைப்படத்தின் தயாரிப்பாளர் மீது வழக்கு தொடரப் போவதாக பிரபல மேஜிக்மேன் ராமன் ஷர்மா தெரிவித்துள்ளார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்தப் படம் மெர்சல். இப்படத்தில் எளிமையான மருத்துவராகவும், மேஜிக்மேனாகவும், கிராமத்து இளைஞராகவும் விஜய் மூன்று வேடங்களில் நடித்திருப்பார். இதில் மேஜிக்மேன் வேடம் அனைவராலும் வெகுவாக ரசிக்கப்பட்டது.
இந்த படத்தில் விஜய்க்கு மேஜிக் கற்றுக்கொடுத்தவர் கனடா நாட்டைச் சேர்ந்த பிரபல மேஜிக்மேன் ராமன் ஷர்மா. ஆனால் அதற்காக பேசப்பட்ட சம்பளத்தை முழுமையாக தேனான்டாள் பிலிம்ஸ் தரவில்லை எனவும், ரூ.4 லட்சம் சம்பள பாக்கி இருப்பதாகவும் ராமன் ஷர்மா குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் அவர் முடிவு செய்துள்ளார்.

பிடித்த சென்னை
இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "நான் சென்னை புறப்பட்டு வருகிறேன். இந்தியாவில் எனக்கு பிடித்த இடங்களில் ஒன்று சென்னை என்றாலும், இந்த பயணம் அவ்வளவு சந்தோஷமானது இல்லை.

சம்பள பாக்கி
சம்பள பாக்கி தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக உள்ளேன். நடிகர் விஜய், இயக்குநர் அட்லி இருவருமே பழகுவதற்கு இனிமையானவர்கள். எனவே அவர்களை இப்பிரச்னையில் இழுப்பதற்கு நான் விரும்பவில்லை' என தெரிவித்துள்ளார்.
ஷாப்பிங்
மெர்சல் திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான ஹேமா ருக்மணியின் புகைப்படம் பதிவிட்டுள்ள ராமன் ஷர்மா, " தான் கஷ்டப்பட்டு உழைத்தப் பணத்தில் எத்தனை ரூபாயை உங்களுடைய தேவைகளுக்கு பயன்படுத்தி இருக்கிறீர்கள்?", என கேட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரீஸில் ஹேமாருக்மணி ஏதோ ஷாப்பிக் செய்வது போல் உள்ளது.

விளக்கம்
மெர்சல் படத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், தங்களால் சம்பள பாக்கியை தர இயலவில்லை என தயாரிப்பு நிறுவனம் சார்பில் ராமன் ஷர்மாவுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அதை சுட்டிக்காட்டுவதற்காகவே அந்த பதிவை அவர் வெளியிட்டுள்ளார்.

தொடரும் சர்ச்சை
மெர்சல் திரைப்படம் ஆரம்பத்தில் இருந்தே சர்ச்சைகளை சந்தித்து வந்துள்ளது. அதில் விஜய் பேசிய சில வசனங்களுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மெர்சல் கதை ரஜினி நடித்த மூன்றுமுகம் படத்தை அடிப்படையாக கொண்டது எனவும் பேசப்பட்டது. இந்நிலையில் மெர்சல் வெளியாகி இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் இன்னும் சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை.


Click it and Unblock the Notifications











