4 சீன்களை நீக்க மெர்சல் டீம் முடிவு?
மெர்சல் படத்திலிருந்து 4 காட்சிகளை நீக்க தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சென்னை: பாஜகவினரின் மிரட்டல் தொடர்ந்து வருவதால், மெர்சல் படத்திலிருந்து 4 காட்சிகளை நீக்க முடிவு செய்துள்ளதாக தயாரிப்பாளர் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் அட்லி இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான படம் மெர்சல் ஆகும். இதில் மருத்துவத்தை வியாபாரமாக செய்பவர்கலுக்கும், ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா பரிவர்த்தனைக்கு எதிராகவும் வசனங்கள், காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தக் காட்சிகளுக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பும், மிரட்டலும் விடுத்து வருகின்றனர். வருமான வரி ரெய்டு உள்ளிட்டவை வரலாம் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இதையடுத்து எதுக்கு வம்பு என்ற முடிவுக்கு தயாரிப்பாளர் தரப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து தயாரிப்பாளர் தரப்பும் படக்குழுவும் இணைந்து ஆலோசனையில் ஈடுபட்டன.
அப்போது படத்தில் மருத்துவம், ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா உள்ளிட்டவை தொடர்பான காட்சிகளை நீக்க முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து வரும் 23 அல்லது 24-ஆம் தேதியில் தணிக்கை குழுவிடம் கடிதம் கொடுத்து பின்னர் நீக்கப்படும் என்று ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் இல்லாததால் அவற்றை நீக்க தேவையில்லை என்று தணிக்கை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ள நிலையில் தயாரிப்பாளர் தரப்பு இவ்வாறு முடிவு எடுத்துள்ளது ரசிகர்களை பெரும் வருத்தமடைய வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











