புரட்சித் தலைவருக்கு நூற்றாண்டு விழா.. தமிழக அரசே நன்றி நன்றி! - நடிகர் சங்கம் திடீர் அறிக்கை
Recommended Video

சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் அமரர் எம்ஜிஆருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடும் தமிழக அரசுக்கு நடிகர் சங்கம் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கடந்த ஓராண்டு காலமாக தமிழக அரசு மாவட்டம் தோறும் பிரமாண்டமாகக் கொண்டாடி வருகிறது.

இந்த நிலையில் நடிகர் சங்கத் தலைவர் நாசர் பெயரில் இன்று ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது.
அந்த அறிக்கை:
பொன்மனச் செம்மலென்றும்
மக்கள் திலகமென்றும், புரட்சி தலைவர் என்றும்
வள்ளல் என்றும்
வல்லவன் என்றும்
தமிழக மக்களின் மனதிலும், வரலாற்றிலும் ஆழமாய் பதிந்த பெயர்
எம்.ஜி.ஆர்.
வருடங்கள் ஆயிரம் கடந்தாலும் அன்றலர்ந்த மலர் போல
அவர்தம் புகழ் ஜொலிக்கும்!
திரைப்படமாகட்டும், அரசியலாகட்டும், தொட்டதுறையெல்லாம் பொன்னாக்கிய மக்கள் மன்னன்.
எட்டாத இலக்கென்றாலும், எல்லா நடிகர்களுக்கும் கனவு நாயகன். தான் நலம் பெற்றது போல், தம் கலை சார்ந்த மற்றவர் வாழ்வும் உயரவேண்டுமென தென்னிந்திய நடிகர் சங்கத்தை உருவாக்கி பலம் பெறச் செய்தவர். அண்ணலவர் செய்த காரியம் இன்று பல்லாயிரம் கலைக் குடும்பந்தனில் ஒளி விளக்காய் மின்னுகிறது. அவர்தம் பூதவுடல் இயற்கையோடு கலந்து, கரைந்தாலும் அவர் செயல்களும் தர்மங்களும் காலம் கடந்து நிற்கும்.
அன்னாரது நூற்றாண்டு விழாவினை தமிழகமெங்கும் கொண்டாடும் தமிழக அரசிற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சிரந்தாழ்ந்த நன்றிகள் கோடி.
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக தலைவர்
எம்.நாசர்
தென்னிந்திய நடிகர் சங்கத்தை உருவாக்கியவர் அமரர் எம்ஜிஆர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











