எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன் நூறாவது நாள் விழா!
பெரிய ஹீரோக்களின் படமாகவே இருந்தாலும், இன்றைக்கு நூறு நாட்களைத் தொடும்போது தியேட்டர்களில் ரசிகர்கள் தலைகளை எண்ணிவிடும் அளவுக்குத்தான் கூட்டம் வருகிறது.
ஆனால் புரட்சித் தலைவர் என்று கொண்டாடப்படும் அமரர் எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன் படம் 49 ஆண்டுகளுக்குப் பிறகு மறு வெளியீடு செய்யப்பட்டு, நூறு நாட்களைத் தொடவிருக்கிறது, அதுவும் ஹவுஸ்புல் காட்சிகளுடன்!

டிஜிட்டலில்
டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்ட இந்தப் படம் கடந்த மார்ச் 14-ந்தேதி 122 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் இப்படத்தை வெளியிட்டார்.

மதுரையில்
மதுரையில் மட்டும் சரியாகப் போகவில்லை என்றார்கள். தேர்தல் முடிந்து அங்கு மறுவெளியீடு செய்ததில் படம் நன்றாக ஓடியது. மற்ற ஊர்களில் ஷிப்டிங் முறையில் தொடர்ந்து இந்தப் படம் ஓடிக் கொண்டுள்ளது.

மல்டிப்ளெக்ஸ்களில்
குறிப்பாக மல்டிப்ளெக்ஸ்களில் நல்ல கூட்டம் இந்தப் படத்துக்கு. வேளச்சேரியில் லக்ஸ் அரங்கம் புதிதாக திறக்கப்பட்ட போது திரையிடப்பட்ட படம் ஆயிரத்தில் ஒருவன். அத்தனைக் காட்சிகளும் ஹவுஸ்புல். படத்தை அந்த அரங்கில் ஒரு மாதம் வரை திரையிட்டனர். கடைசி நாள் காட்சிக்கும் கணிசமான கூட்டம்.

100வது நாள்
இன்றும் குறையாத வசூலுடன் சென்னை சத்யம், ஆல்பட் தியேட்டர்களில் 100 வது நாளை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறது ஆயிரத்தில் ஒருவன்.

ஆல்பட் திரையரங்கில்
இந்த விழா வரும் 22 ந்தேதி ஆல்பர்ட் தியேட்டரில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ரசிகர்கள் அன்று காலை 11 மணிக்கு கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் சிறப்பு பூஜை செய்கின்றனர். 1000 பேருக்கு அன்னதானம் வழங்குகிறார்கள்.

ஊர்வலம்
மாலை 3 மணிக்கு சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட் அருகில் உள்ள எம்.ஜி.ஆர் சிலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஆல்பட் தியேட்டர் சென்றடைகிறார்கள்.

சிறப்புக் காட்சி
ஆல்பட்டில் மாலை 6.30 மணிக்கு ஆயிரத்தில் ஒருவன் படத்தின் சிறப்பு காட்சி நடக்கிறது. இதில் நடிகர்கள், சரத்குமார், விவேக், மயில்சாமி, இயக்குநர் பி.வாசு, இசையமைப் பாளர் எம்.எஸ். விஸ்வநாதன், பின்னணி பாடகி பி.சுசீலா, திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம், பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தினர் பங்கேற்கின்றனர்.


Click it and Unblock the Notifications











