எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன்.. வெற்றிகரமான இரண்டாவது வாரம்!
இப்போது வெளியாகும் பல படங்களுக்கு வெற்றிகரமான இரண்டாவது வாரம் என போஸ்டர் அடித்து ஒட்டக்கூட வாய்ப்பிருப்பதில்லை அதன் தயாரிப்பாளர்களுக்கு.
வெளியான மூன்றாம் நாளில்... ஏன், சில படங்களை இரண்டாவது காட்சியிலேயே அரங்கைவிட்டு தூக்கிவிடுகிறார்கள். இது நாம் சொல்லும் தகவலல்ல.. தயாரிப்பாளர் சங்கத்து நிர்வாகிகள் அடிக்கடி சொல்லும் தகவல்.

ஆயிரத்தில் ஒருவன்
இப்படிப்பட்ட சூழலில், 49 ஆண்டுகளுக்கு முன் வெளியாக வசூலில் சாதனைப் படைத்த மக்கள் திலகம் எம்ஜிஆர் - ஜெயலலிதாவின் ஆயிரத்தில் ஒருவன் படத்தை கடந்த வாரம் டிஜிட்டலில் வெளியிட்டார்கள்.
எம்ஜிஆர் கட்டவுட்களுக்கு மாலை போட்டு, பூஜை செய்து, கற்பூரம் காட்டி, பாலாபிஷேகம் செய்து அமர்க்களமாக படத்தை வரவேற்றனர் ரசிகர்கள்.

2-வது வாரம்
நூற்றுக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் படம் வெளியானது. இவற்றில் பெரும்பாலான அரங்குகளில் படம் வெற்றிகரமான இரண்டாவது வாரத்தைத் தாண்டியிருக்கிறது.
சென்னையில் சத்யம், எஸ்கேப், பி.வி.ஆர்., தேவி பாரடைஸ், அபிராமி உள்ளிட்ட தியேட்டர்களில் திரையிடப்பட்டு 2-வது வாரம் ஓடுகிறது. நேற்று தேவி பாரடைஸ் தியேட்டரில் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு படம் பார்த்தனர். எம்.ஜி.ஆர். கட்- அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து படம் பார்த்தனர்.

வசூல்
இயக்குநர் அமீர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் உள்ளிட்ட பலர் படம் பார்த்தனர். நேற்று ஒரேநாளில் பகல் காட்சியில் மட்டும் இந்த தியேட்டரில் ரூ.60 ஆயிரத்து 379 வசூலாகியுள்ளது.
ஒருவாரத்துக்கு முன்பு இதே தியேட்டரில் காலை, பகல் காட்சி இரண்டிலும் ரூ.47 ஆயிரத்து 494 மட்டுமே வசூலானது. இரண்டாவது வாரத்தில் வசூல் கூடி இருப்பதாக தியேட்டர் மேலாளர் தெரிவித்தார்.
படம் பார்த்த ரசிகர்கள் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை ஆரவாரமாக படம் பார்த்தனர். கப்பலில் பயணம் செய்து வந்த அனுபவத்தை பெற்ற சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டனர்.

பலன் கிடைத்துவிட்டது
படத்தை வெளியிட்ட திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் கூறுகையில், "ஒரு வருடம் இரவு பகல் பணிபுரிந்து கஷ்டப்பட்டு இப்படத்தை டிஜிட்டலில் புதுப்பித்ததற்கான பலனை பெற்று விட்டேன். தேர்தல் முடிந்த பிறகும் இந்த படம் தமிழகம் முழுவதும் திரையிடப்படும்," என்றார்.

மதுரையில் பார்க்க ஆளில்லை...
அதே நேரம் இந்தப் படம் வெளியான இரண்டாவது நாளே மதுரையில் தூக்கப்பட்டுவிட்டதாகத் தெரிய வந்தது. எம்ஜிஆரின் கோட்டை எனப்பட்ட மதுரையில் படம் சரியாகப் போகாததாலேயே, தேர்தலுக்குப் பிறகு மீண்டும் வெளியிடப் போவதாக திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











